கோவையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி பூண்டி அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. இந்த கோயில் அடிவாரத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் 7-வது மலையில் சுயம்புலிங்க சுவாமி உள்ளது. இந்த மலையில் உள்ள சுயம்புலிங்க சுவாமியை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம்.
தென் கைலாயம் என பக்தர்களால் போற்றப்படும் கோவை வெள்ளியங்கிரி சிவன் கோயிலுக்கு 7 மலையலைக் கடந்து சென்று பக்தர்கள் மனமுருகி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளியங்கிரி மலையேறிய 3 பேர் உடல்நிலை சரி இல்லாமல் உயிரிழந்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் புவனேஷ்வரன் (18) தனது பள்ளி நண்பர்களுடன் கடந்த 17.04.2024 அன்று தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு நேற்று 18.04.2025 காலை வெள்ளியங்கிரிக்கு வந்தடைந்துள்ளார்.
சுவாமி தரிசனம் முடித்துவிட்டு நேற்றிரவு மலையில் இருந்து இறங்கும்போது, 7வது மலையில் புவனேஷ்வரன் கால் தவறி சுமார் 10 மீட்டர் ஆழத்தில் உருண்டு விழுந்துள்ளார். இந்த விபத்தில் புவனேஷ்வரனின் இடது காதின் அடியிலும், தலையின் பின் பக்கத்திலும் பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த டோலி பாரம் தூக்கும் பணியாளர்கள், கடும் சிரமத்திற்கு இடையே புவனேஷ்வரனை அடிவாரத்திற்குக் கொண்டு வந்தனர்.
பின்னர் அவர் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும், சிகிச்சைப் பலனின்றி புவனேஷ்வரன் உயிரிழந்தார். சம்பவம் குறித்து புவனேஷ்வரனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளியங்கிரி மலை ஏறிவிட்டு இறங்கிய இளைஞர் கால் இடறி விழுந்து உயிரிழந்த துயர சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.