/tamil-ie/media/media_files/uploads/2022/03/sexual.jpg)
கோவையில் செல்போன் கடை உரிமையாளர் கைது
கோவையில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட இளைஞர் பிடித்து போலீசார் சிறையில் தள்ளினர்.
கோவையை சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒரு கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு ஒருவர் வாட்ஸ்-அப்பில் அடிக்கடி மெசேஜ் அனுப்பி வந்தார்.
அதை அந்த மாணவி கண்டுகொள்ளாததையடுத்து அந்த நபர் மாணவியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தன்னை காதலிக்கும்படியும் கூறி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, உன்னை யார் என்றே எனக்கு தெரியாது, பின்னர் எப்படி உன்னை காதலிக்க முடியும் என்று கேட்டுள்ளார்.
அத்துடன் அவர் தொடர்பு கொண்டால் அதை அந்த மாணவி எடுத்து பேசுவதும் இல்லை. அவர் அனுப்பும் மெசேஜை பார்ப்பதும் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த நபர் திடீரென்று அந்த மாணவியின் வாட்ஸ்-அப்புக்கு ஒரு புகைப்படத்தை அனுப்பியுள்ளார். அதில் அந்த மாணவியின் புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டு ஆபாசமாக இருந்தது.
அத்துடன் அதில் சில ஆபாச வார்த்தைகளும் இடம் பெற்று இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் ஆய்வாளர் அருண் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அதில் அந்த மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பியது வடவள்ளியை சேர்ந்த மனோஜ்குமார் (வயது 23) என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் மனோஜ்குமாரை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் அவர் செல்போன் கடை நடத்தி வருவதும், அந்த மாணவி, தன்னை காதலிக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்து அவருடைய புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அவருக்கும், மாணவியின் உறவினர்களுக்கும் அனுப்பி வைத்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மனோஜ்குமாரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்பு சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் பி. ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.