கோவையில் சாலையோரம் படுத்திருந்த வாலிபர் மீது டீசல் ஊற்றி எரித்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கைதான தொழிலாளி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மதுரையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது30). இவர் கோவை சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் சாலையோரம் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார்.கடந்த 14-ந்தேதி இரவு சுரேஷ் அந்த பகுதியில் சாலையோரம் படுத்து இருந்தார்.
Advertisment
அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அவர் மீது டீசலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி சென்றார். இதில் சுரேசின் உடல் முழுவதும் தீ மளமள வென பரவியது. அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். இதனை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
90 சதவீதம் உடல் கருகிய நிலையில், சுரேசை அக்கம், பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது.
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தீவைத்த மர்ம நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது ஒருவர் தீவைத்து எரித்து தப்பி ஓடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதை வைத்து, போலீசார் விசாரணை நடத்திய போது, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை சேர்ந்த தொழிலாளியான சுப்பிரமணி (53) என்பவர் சுரேஷ் மீது தீ வைத்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, போலீசார் சுப்பிரமணியை தேடி மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், சுப்பிரமணி, சுரேசுடன் சேர்ந்து அடிக்கடி மது குடித்து வந்தது தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று இருவரும் மது குடித்த போது, அவரது பணத்தை சுரேஷ் தெரியாமல் எடுத்ததாக சந்தேகப்பட்டு கேட்டும், இதனால் தகராறு ஏற்பட்டு ஆத்திரத்தில் அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பாட்டிலில் டீசலை வாங்கி வந்து சுரேஷ் மீது தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பிச்சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர்.
இந்த நிலையில், கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து, போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றினர். மேலும், சிங்காநல்லூர் காமராஜர் ரோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் சுப்பிரமணியத்திற்கு பாட்டிலில் பெட்ரோலை விற்பனை செய்ததாக பெட்ரோல் பங்க் ஆபரேட்டர் பாஸ்கரன் (62) மற்றும் காசாளர் பாலகிருஷ்ணன் (59)ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகர போலீசார் பாட்டில்களில் பெட்ரோல் விற்பனை செய்யக்கூடாது என பெட்ரோல் பங்குகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.
செய்தி: பி. ரஹ்மான்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"