/indian-express-tamil/media/media_files/2025/09/30/felix-gerald-arrest-2-2025-09-30-17-49-42.jpg)
கரூரில் விஜய்யின் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பாக தவறான தகவல்களையும் வதந்தி பரப்பியதாக யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு செவ்வாய்க்கிழமை காலை சைபர் கிரைம் போலீசாரல் கைது செய்யப்பட்டார்.
கரூரில் த.வெ.க தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் கடந்த சனிக்கிழமை (27.09.2025) உயிரிழந்தனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, த.வெ.க கரூர் மாவட்ட நிர்வாகிகள் மதியழகன், பவுன்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பாக தவறான தகவல்களையும் வதந்தி பரப்பியதாக சமூக ஊடகப் பயனர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அந்த வகையில், கரூரில் விஜய்யின் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பாக தவறான தகவல்களையும் வதந்தி பரப்பியதாக யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு செவ்வாய்க்கிழமை காலை சைபர் கிரைம் போலீசாரல் கைது செய்யப்பட்டார்.
ஃபெலிக்ஸ் ஜெரால்டுவைப் போலீசார் கைது செய்ததுகுறித்து ஊடகங்களிடம் பேசிய அவருடைய மனைவி ஜேன் கூறியதாவது: “வழக்கமாக காலையில் நாங்கள் 6.30 மணிக்குதான் எழுந்திருப்போம். அந்த நேரத்தில் எனது கணவர் (ஃபெலிக்ஸ் ஜெரால்டு) செய்தித்தாள் வாங்குவதற்காகப் போயிருந்தார். செய்தித்தாள் வாங்கிவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு, அது வழக்கமாக நாங்கள் காபி சாப்பிடும் நேரம். காபி தயார் செய்துகொண்டிருக்கும்போது அவர்கள் கதவு தட்டினார்கள். ஒரு பெண் எஸ்.ஐ இருந்தார்கள். அவர் பெயர் எனக்கு தெரியாது. அவர்கூட 4 பேர் வந்திருந்தார்கள். அவர்கள் சைபர் கிரைமில் இருந்து வந்திருக்கிறோம் என்று கூறினார்கள். உள்ளே வாருங்கள் என்று கூறினேன். அவர்கள் கொஞ்சம் தயங்கினார்கள். அதற்கு நான், நாங்கள் பிளாட் குடியிருப்பில் இருக்கிறோம். பக்கத்து வீடு தொந்தரவு ஆகக் கூடாது. நீங்கள் உள்ளே வாருங்கள் என்று கூறினே. அதனால், அவர்கள் 5 பேரும் உள்ளே வந்தார்கள். அவர்களிடம் என்னுடைய கணவர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு, கைது பண்ண வந்திருக்கிறீர்களா என்று கேட்டார். அவர்களும் ஆமாம், கைது செய்யதான் வந்திருக்கிறோம் என்று சொன்னார்கள். அதற்கு எனது கணவர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு “நான் இன்னும் ஃபிரஷ் ஆகவில்லை, முகம்கூட கழுவவில்லை. 2 நிமிடம் அவகாசம் கொடுங்கள், என்று கேட்டு, முகம் கழுவிக்கொண்டு, உடை கூட மாற்றவில்லை. அவர்களுடன் புறப்பட்டு சென்றார். அவர்கள் 7 மணிக்கு வந்தார்கள். அவர் சரியாக 7.11-க்கு அவர்களோடு சென்றார். அவர் லிஃப்டில் போகும்போது நான் ஒரு வீடியொ எடுத்தேன். அவ்வளவுதான்.
அதற்குள் நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து சீருடையில் 5 போலீசார் வந்திருந்தார்கள். அவர்களும் மேலே ஏறி எங்களுடைய பிளாட்டுக்கு வந்துவிட்டார்கள். இது எல்லாம் ஒரு 10 நிமிடம்தான். எனக்கு தெரியாது, கைது என்று சொல்லித்தான் தெரியும்.
அவர்கள் வேறு எதுவுமே சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை. பதற்றத்தில் எதுவும் கேட்கவில்லை. அவர்களிடம் எங்கே கூட்டிக்கொண்டு போகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு கூட்டிக்கொண்டு போகிறோம் என்று கூறினார்கள்.
எனக்கு காவல் ஆணையர் அலுவலகம் எங்கே இருக்கிறது என்று தெரியாது. வேப்பேரியா அல்லது இன்னொரு இடத்தில் இருக்கும் என்று கூறினார்கள். அதற்கு பிறகு, நாங்கள் எங்கள் வழக்கறிஞரிடம் பேசினோம். இதற்கு மேல் வேறு எந்த தகவலும் கூறவில்லை.
இதை முதல்முறையே பார்த்துவிட்டேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கருத்து சுதந்திரம் நிஜமாகவே இருக்கிறதா? இல்லாவிட்டால் கிடையாதா? மற்றபடி, ரெட் பிக்ஸுக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறதா? அது ஒன்றுதான் எனக்கு மனசுக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது.
எனது கணவர் உண்மைக்காக மட்டும்தான் நிற்பார். அவர் இதழியல் வேலையை சரியான முறையில் செய்ய விரும்பினார். சரியாக செய்ய வேண்டும். உண்மையான தகவல்களைத் தர வேண்டும் என்று நினைத்து, அவர் விரும்பிதான் இந்த இதழியல் துறையை எழுத்து சுத்தமாக இருந்தார். அவர் இதழியலில் உண்மையாக இருந்தார். இது மட்டும்தான் எனக்குத் தெரியும். உண்மையை மட்டும்தான் நாம் பேச வேண்டும் ஜேன் என்று கூறுவார். எல்லா இடத்திலும் இதை மட்டும்தான் பதிவு பண்ணுகிறார். அதற்காக மட்டும்தான் நான் அவருடன் உறுதியாக நிற்கிறேன். இல்லையென்றால், அவர் வேறு மாதிரி பேசுவதாக இருந்திருந்தால், கடினமாக இருந்திருக்கும். நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் இவ்வளவு உண்மையான மனிதருடன் வாழ்கிறோம் என்பதில் பெருமையாக இருக்கிறோம். இனிமேல் நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். என்னிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நீதிமன்றம் தரப்பில் இருந்து என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை நம்பித்தான் நான் இருக்கிறேன்.” என்று கூறினார்.
ஃபெலிக்ஸ் ஜெரால்டு வதந்தி பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “நான் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. வதந்தி என்றால் எது வதந்தி என்று நமக்கு தெரியவில்லை. நீதிமன்றம் சொல்லட்டும், அதைப் பற்றி சொல்வதற்கு எனக்கு தெரியவில்லை” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.