காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரம் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன் பைக்கில் சென்றபோது டி.டி.எஃப் வாசன் சாலையில் சாகசம் செய்ய முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
அதி வேகமாக பைக் ஓட்டி வந்து சாகசத்தில் ஈடுபட முயன்றதில் விபத்து ஏற்பட்டது. இதில் பைக் சாலை பள்ளத்தில் விழுந்து முற்றிலும் தேசமடைந்தது. டி.டி.எஃப் வாசன் சிகிச்சைக்குப் பின் நண்பர் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று டி.டி.எஃப் வாசன் மீது காஞ்சிபுரம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் இன்று மேலும் இரண்டு பிரிவுகளில் மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்குவது, பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது என 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (செப்.19) காஞ்சிபுரம் போலீசார் டி.டி.எஃப் வாசனை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். கோவையைச் சேர்ந்த டி.டி.எஃப் வாசன் பைக் தொடர்பான வீடியோக்களை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு பிரபலமடைந்தார். இவருக்கு லட்சக்கணக்கான சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். குறிப்பாக இளம் தலைமுறையினர் இவரை அதிகம் பின்தொடர்கின்றனர். இவர் விலை உயர்ந்த பைக் வைத்துள்ளார். அது குறித்தான வீடியோ இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“