ஜொமாட்டோ நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் – காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகமாட்டீங்க…
Rs.1 lakh for Zomato : சென்னையில் உள்ள ஜொமாட்டோ அலுவலகத்தில் கொசு உற்பத்தி செய்யும் விதத்தில் வைத்திருந்ததால், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், ஜொமாட்டோ நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.
By: WebDesk
Updated: October 21, 2019, 12:05:06 PM
chennai, Zomato, Greater Chennai Corporation,dengue fever,chennai corporation, mosquitogenic, fine, health, diseases, dengue, சென்னை, ஜொமாட்டோ, சென்னை மாநகராட்சி, அபராதம், கொசு உற்பத்தி மையம்
சென்னையில் உள்ள ஜொமாட்டோ அலுவலகத்தில் கொசு உற்பத்தி செய்யும் விதத்தில் வைத்திருந்ததால், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், ஜொமாட்டோ நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கொசு உற்பத்தி ஆகும் இடங்களை கண்டறிந்து மாநகராட்சி அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி, சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஜொமாட்டோ அலுவலகத்தின் ஒருபகுதியில் உணவு டெலிவரி பேக்குகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் மழைநீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்திக்கூடமாக அவை மாறியிருந்ததை, மாநகராட்சி அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள், ஜொமாட்டோ நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் இடத்தை தூய்மையாகவும் வைத்துக்கொள்ள ஒப்புக்கொண்டனர்.
ஒரு இடத்தில் மழைநீர் தேங்கி, கொசு உற்பத்திக்கூடமாக மாறியிருந்தால், அதன் பாதிப்பு 300 மீட்டர் வரை இருக்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐசிஎப்பும் தப்பவில்லை : இதே காரணங்களுக்காக ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான இன்டகிரெல் கோச் பேக்டரிக்கும், மாநகராட்சி ரூ.1 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை துணை கமிஷனர் மதுசூதனன் இதுகுறித்து கூறியதாவது, மக்கள் தங்களால் இயன்றவரை தங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தங்களது பகுதிகளில் கொசு உற்பத்திக்கூடமாக மாற்றிய 387 நபர்களிடமிருந்து கடந்த 10ம் தேதி வரை ரூ.20 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த பணம், அரசு கருவூலத்தில் சேர்க்கப்படும். அபராதம் விதிப்பதன் மூலம், பணம் வசூலிப்பதில்லை எங்களின் நோக்கம், தொற்றுநோய் பரவுவதை தடுக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆகும். நோய் பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.