மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த திருநகர் பகுதியில் 1956 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் முத்து தேவர் முக்குலத்தோர் அரசு உதவி பெறும் பள்ளியில் திருப்பரங்குன்றம், திருநகர், திருமங்கலம் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
எதிர்காலத்தில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் அவசியம் கருதியும், எதிர்கால சவால்களுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கத்துடனும் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு AI பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கென பிரத்யேகமாக AI செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் ஒன்றைத் திறந்து வைத்து, அப்பள்ளி ஆசிரியர்களே உருவாக்கிய AI பாட புத்தகத்தையும் பள்ளி நிர்வாகம் அண்மையில் வெளியிட்டது. மேலும், மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் ஸ்மார்ட் வகுப்பறையும் வைத்து பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
மாணவர்களில் கல்வி திறனை மேம்படுத்த தலைமையாசிரியர் அறிவுறுத்தலின் பேரில் அந்தப் பள்ளியில் பணிப்புரியும் ஆசிரியர்கள் சேர்ந்து AI தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் பள்ளி மாணவர்கள் தங்களது பாடத்தினை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக AI தொழில்நுட்ப ஆய்வகம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/06/20/madurai-ai-lab-3-2025-06-20-21-33-34.jpg)
இதில், ஒரே நேரத்தில் 40 மாணவர்கள் அமர்ந்து ஏ.ஐ. பாடம் படிக்கலாம். இதற்கென ரூ.2.5 லட்சம் மதிப்பில் 20 டேப் பள்ளி நிர்வாகம் வாங்கி கொடுத்துள்ளது. இந்த ஆய்வகத்தில் டிஜிட்டல் வசதியுடன் இயங்கக் கூடிய திரை, ஏசி, ஸ்பீக்கர் வசதி உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்த் கூறியதாவது; தற்பொழுது அனைத்து துறைகளிலும் ஏ.ஐ தொழில்நுட்பம் முதன்மை பெற்ற வருகிறது. இந்த சூழலில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்தும் இதற்காக ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ஏஐ மூலம் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய பாட புத்தகங்களை உருவாக்கி உள்ளனர். இந்த ஏ.ஐ. புத்தகங்கள் மாணவர்களின் கல்வி தரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். ஒவ்வொரு மாணவனையும் முன்னேற்ற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. சி.பி.எஸ்.இ. பள்ளிகளுடன்தான் எங்களுக்குப் போட்டி, அதற்காக ஏ.ஐ. பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம் என்று கூறினார் தலைமை ஆசிரியர் ஆனந்த்.
இன்றைய காலகட்டத்தில் மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு மாணவர்கள் தவறான வழிகளில் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்கும் விதமாக ஏஐ தொழில்நுட்பத்திலான பாட புத்தகத்தை உருவாக்கியுள்ளோம். இப்பாட புத்தகத்தில் வீடியோ மற்றும் ஆடியோ செயல்பாடுகள் மையப்படுத்தி கார்ட்டூன்களாக உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும், வகுப்பறையில் மாணவர்களுக்குக் கவனச் சிதைவு ஏற்படாத வகையில் இருக்கும். இன்றைய தலைமுறைகள் செல்போனை தவறாக பயன்படுத்தும் நிலை மாறும், அதற்கு இது தூண்டுகோலாக அமையும். எதிர்கால சமுதாயத்தை நல்ல முறையில் உருவாக்குவோம் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது என்றார்.
புகைப்படங்கள்: கோகுல், மதுரை