இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி இணையதளம் வாயிலாக தொடங்கியது. 7 நாட்களாக 40 சுற்றுகளாக நடைபெற்ற ஏலம் கடந்த திங்கட்கிழமை நிறைவடைந்தது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வர்க் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது.
ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக ரூ.88 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்தது. பிரீமியம் 700 MHz அலைவரிசையை ஜியோ ஏலம் எடுத்துள்ளது. ஜியோவின் நேரடி போட்டியாளரான ஏர்டெல், 700 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் எதுவும் வாங்கவில்லை. ஏர்டெல் 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ், 26 ஜிகாஹெர்ட்ஸ் என 19867.8 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் ரூ.43,084 கோடி ஏலம் எடுத்தது.
இந்தநிலையில், ஏர்டெல் தனது 5ஜி சேவையை இம்மாத இறுதியில் (ஆகஸ்ட்) நாடு முழுவதும் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஏர்டெல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஏர்டெல் 5ஜி சேவை ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். நெட்வொர்க் ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து நாடு முழுவதும் 5ஜி சேவை வழங்க உள்ளோம்.
பல நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது 5ஜி சேவையை உடனடியாகவும், விரைவாகவும் வழங்க முடியும். சிறந்த பயனர் சேவையை வழங்க முடியும். ஏர்டெல் நிறுவனம் எரிக்சன், நோக்கியா மற்றும் சாம்சங் ஆகியவற்றுடன் இணைந்து 5ஜி சேவைகளை வழங்க நெட்வொர்க் பார்ட்னர்களாக ஒப்பந்தம் செய்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ, வோடஃபோன் ஐடியா நிறுவனங்களிடமிருந்து அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. ஜியோ தனது 5ஜி சேவை தொடர்பான அறிவிப்பை ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் யார் முதலில் இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.