பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்.), ஜூன் 18 அன்று, தனது 5ஜி சேவைக்கு Q-5G (குவாண்டம் 5ஜி) எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்தது. பி.எஸ்.என்.எல்-லின் 5ஜி நெட்வொர்க்கின் "சக்தி, வேகம் மற்றும் எதிர்காலத்தைப் பிரதிபலிக்கும்" என்று X சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளது.
வணிக நிறுவனங்களுக்கான இணைய லீஸ் லைனாக Q-5G ஃபிக்ஸட் வயர்லெஸ் அக்சஸ் (Q-5G FWA) சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. குவாண்டம் 5ஜி FWA "குரல் அழைப்பு இல்லாமல் அதிவேக டேட்டாவை மட்டும்" வழங்கும் என்றும், வணிக நிறுவனங்களுக்கு சிம் இல்லாத, வயர்லெஸ் இண்டெர்நெட் வழங்கும் என்றும் பி.எஸ்.என்.எல் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
பி.எஸ்.என்.எல்-ன் புதிய க்யூ-5ஜி FWA (Fixed Wireless Access) சேவை, ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் அரிதாகக் காணப்படும் 2-ம் மற்றும் 3-ம் நிலை நகரங்களை இலக்காகக் கொண்டுள்ளது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப அடிப்படையில் இயங்கும் நெட்வொர்க் ஆபரேட்டரின் புதிய சேவை, நெட்வொர்க் வசதி குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கும் வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அதிவேக இணையத்தை வழங்க உதவும்.
இருப்பினும், ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா வழங்கும் வழக்கமான 5ஜி சேவைகளைப் போலல்லாமல், பி.எஸ்.என்.எல்-ன் க்யூ-5ஜி FWA சேவையில் குரல் அழைப்புகள் (voice) இல்லை. அதாவது, பயனர்கள் அழைப்புகள் செய்ய முடியாது. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் மற்றும் ஜியோ ஏர்ஃபைபர் போன்ற சேவைகளைப் போன்றது. அவை சிம் அல்லது வயர்கள் இல்லாமல் வேகமான இணைய இணைப்பை வழங்குகின்றன.
மேலே குறிப்பிட்ட சேவைகளைப் போலவே, பி.எஸ்.என்.எல். தனது புதிய க்யூ-5ஜி FWA சேவைக்காக, வாடிக்கையாளரின் கூரையில் Customer Premises Equipment (CPE) கருவியை நிறுவும். இது 5ஜி இணைப்பைப் பெற்று, ஒரு ரூட்டரைப் பயன்படுத்தி பயனரின் வீட்டிற்கு இணையத்தை வழங்கும். பி.எஸ்.என்.எல்-ன் இந்த புதிய க்யூ-5ஜி FWA சேவை குறைந்தபட்சம் 100 Mbps வேகத்தை ரூ.999 மாதக் கட்டணத்தில் வழங்குகிறது. மேலும், நிறுவனம் 300 Mbps வேகத்துடன் கூடிய ரூ.1,499 திட்டத்தையும் வழங்குகிறது.
தற்போது, பி.எஸ்.என்.எல்-ன் க்யூ-5ஜி FWA சேவை ஹைதராபாத்தில் மட்டுமே கிடைக்கிறது. எனினும், இந்த தொலைத்தொடர்பு நிறுவனம் தனது சேவையை இந்தாண்டு செப்டம்பருக்குள் பெங்களூரு, புதுச்சேரி, விசாகப்பட்டினம், புனே, குவாலியர் மற்றும் சண்டிகர் போன்ற நகரங்களுக்கு விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக, பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தனது 5ஜி நெட்வொர்க்குகளை தீவிரமாக சோதனை செய்து வருகிறது. இருப்பினும், இந்த சேவை எப்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.