அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆப்பிள் நிறுவனம், தனது ஐபோன் உற்பத்திக்கு பெருமளவு சீனாவை சார்ந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கா - சீனாவுடனான வர்த்தக போர் காரணமாக ஆப்பிள் சீனாவில் உற்பத்தியை குறைக்க முடிவு செய்தது. மற்ற நாடுகளில் உற்பத்தியை மாற்ற முடிவு செய்தது.
இதற்காக பல்வேறு நாடுகள் போட்டி போடுகின்றன. இந்தியாவும் ஆப்பிள் முதலீடுகளை ஈர்க்க ஆலோசித்து வருகிறது. மத்திய அரசு இது தொடர்பாக பல்வேறு மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலங்கள் முதலீடுகளை ஈர்ப்பதில் உறுதியளித்துள்ளன. அடுத்த ஐந்தாண்டுகளில் ஆப்பிளின் உலகளாவிய உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவில் நடைபெறுவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் திட்டமாகும்.
"எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் உள்ள வாய்ப்புகள் குறித்து தெரிவிக்க அனைத்து மாநில அரசுகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். மேலும் பல மாநிலங்கள் அதில் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன" என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
ஆப்பிள் தனது மொத்த உற்பத்தியில் சுமார் 40-45 சதவீத தயாரிப்புகளை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மத்திய அரசு இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தி வருகிறது. ஐடி வன்பொருள் உற்பத்திக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தை மறுவடிவமைப்பது மற்றும் மின்னணு பாகங்கள் உற்பத்திக்கு ஆதரவாக புதிய பிஎல்ஐ திட்டங்களை அறிமுகப்படுத்துவது முதல் பல திட்ட கொள்கைகளை கொண்டு வர உள்ளது.
போன் மட்டுமல்லாமல் ஸ்மார்ட் வாட்ச்கள் போன்ற எலக்ட்ரானிக் பாகங்கள் உற்பத்திக்கு ஆதரவளிக்கிறது. ஏற்கனவே இந்தியாவில் பாக்ஸ்கான், பெக்ட்ரான், விஸ்ட்ரான் ஆகியவை இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைத்து ஐபோன் தயாரிக்கும் பணியில் உள்ளது.
சீனாவின் Zhengzhou நகரில் உலகின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. ஆனால் இங்கு ஏற்பட்ட பிரச்சனை, அமெரிக்கவுடனான வர்த்தக போர் போன்றவற்றால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. குறிப்பாக அந்நாட்டின் கோவிட் கொள்கைகள் உற்பத்தியில் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் ஆப்பிள் தனது சப்ளையர்களை ஆசியாவில் மற்ற இடங்களிலிருந்து பெற திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் இந்தியாவில் அதன் முதன்மையான ஐபோன் 14 ஐ அசெம்பிள் செய்யத் தொடங்கிய ஆப்பிள், தி இந்தியன் எக்ஸ்பிரஸின் கருத்துக்கு பதிலளிக்கவில்லை.
கடந்த ஆண்டு இறுதியில், சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் ஊழியர்கள் தங்கும் விடுதியில் குறிப்பாக பெண்கள் தங்கும் விடுதியில் போதுமான வசதிகள் இல்லை எனக் கூறி போராட்டம் வெடித்தது. இது குறித்து ஆப்பிள் மற்றும் ஃபாக்ஸ்கான் இரண்டும் இந்தியாவிடம் முறையிட்டன. இந்நிலையில், ஊழியர்கள் ஊதியம், தங்குமிடம் மற்றும் பிற வசதிகள் குறித்து திட்டம் வரையறுக்கமாறு மத்திய அரசு மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/