வெள்ளி கிரகத்திற்கு அருகில் மறைந்திருக்கும் ராட்சத விண்கல் கூட்டம், எதிர்காலத்தில் பூமிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறக் கூடும் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசிலின் சாவோ பாலோ பல்கலைக் கழக வானியலாளர்கள் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.
'இணை-சுற்றுப்பாதை விண்கல்' (Co-orbital asteroids) என்றழைக்கப்படும் இந்த விண்வெளிப் பாறைகள், பொதுவாக கிரகங்களை நேரடியாகச் சுற்றாமல் அவற்றின் அருகே பயணிக்கின்றன. இவற்றுக்கென ஒரு நிலையான சுற்றுவட்டப் பாதை இல்லாததால், இவற்றைக் கண்காணிப்பது விஞ்ஞானிகளுக்கு மிகவும் கடினமானதாக உள்ளது. சூரியனுக்கு அருகில் பயணிப்பதால் ஏற்படும் அதிகப்படியான ஒளி காரணமாக, இவை பெரும்பாலும் கண்காணிப்புக் கருவிகளின் பார்வையில் இருந்து தப்பிவிடுகின்றன.
சமீபத்திய ஆய்வின்படி, வெள்ளி கிரகத்தைச் சுற்றி தற்போது 20 பிரம்மாண்ட விண்கல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றில், ஒரு கிரகத்தின் சுற்றுப்பாதைக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ நிலையாகப் பயணிக்கும் 'ட்ரோஜன்' (Trojan) வகை விண்கல்லும் அடங்கும். அதுமட்டுமின்றி, 'சூஸ்வே' (Zoozve) என்று பெயரிடப்பட்ட 'குவாசி-மூன்' (Quasi-moon), அதாவது போலி-நிலா ஒன்றும் இந்தக் கூட்டத்தில் உள்ளது. இது பூமியைச் சுற்றி வருவது போன்ற தோற்றத்தை அளித்தாலும், உண்மையில் அது சூரியனையே சுற்றி வருகிறது.
இந்த விண்கல் தற்போது பூமிக்கு உடனடி ஆபத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், நீண்ட கால அடிப்படையில் இவற்றின் பாதை கணிக்க முடியாத வகையில் மாறக்கூடும். அவ்வாறு பாதை மாறும் பட்சத்தில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பூமியைத் தாக்கும் அபாயம் உள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
வெள்ளி கிரகத்திற்கு அருகில் பதுங்கியிருக்கும் 20 'சிட்டி-கில்லர்' விண்கல் எதிர்காலத்தில் பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு, ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. இந்த 20 விண்கற்களும் நமது சூரிய குடும்பத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையில் அமைந்துள்ள விண்கள் சுற்றுவட்டத்தில் (Asteroid Belt) வந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இவை அனைத்தும் 140 மீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்டவையாக இருக்கலாம். இந்த அளவில் ஒரு விண்கல் பூமியைத் தாக்கினால், அது ஒரு பெரிய நகரத்தையே முற்றிலுமாக அழிக்கும் சக்தி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த விண்கற்கள் இருக்கும் இடத்திலிருந்து பூமிக்கு எந்த உடனடி ஆபத்தும் இல்லை. ஆனால், அவற்றுக்கு நிலையான, கணிக்கக் கூடிய சுற்றுப்பாதை இல்லாததால், அவை பூமிக்கு அருகில் வரும்போது நமது கிரகத்தின் ஈர்ப்பு விசை (Gravitational Pull) அவற்றை ஒரு மோதல் பாதைக்கு இழுக்கக்கூடும்.
பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகமான வெள்ளி, சுமார் 40 மில்லியன் கி.மீ. (25 மில்லியன் மைல்கள்) தொலைவில் மட்டுமே உள்ளது. இந்த நெருக்கம், நீண்ட கால அடிப்படையில் ஒருவித ஈர்ப்பு விசை தாக்கத்திற்கான சாத்தியத்தை அதிகரிக்கிறது. 'arXiv' என்னும் அறிவியல் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில், விஞ்ஞானிகள் இந்த 'சிட்டி-கில்லர்’ விண்கல்லின் சுற்றுப்பாதையை கணினி மூலம் சுமார் 36,000 ஆண்டுகளுக்கு உருவகப்படுத்தி (Simulation) ஆய்வு செய்தனர்.
அதன் முடிவில், இவற்றில் சில விண்கல் பூமிக்கு அருகில் வர வாய்ப்புள்ளது என்றும், அப்போது அவை நமது கிரகத்தின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படலாம் என்றும் தெரியவந்துள்ளது. இருப்பினும், தற்போதைய நிலவரப்படி, இந்த விண்கல் பூமியைத் தாக்கும் நிகழ்வுக்கான சாத்தியக் கூறுகள் மிக குறைவு என்றே ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனாலும், அந்த ஆபத்து பூஜ்ஜியம் அல்ல என்பதையும், அதனை முழுமையாக நிராகரிக்க முடியாது என்பதையும் இந்த ஆய்வு அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.