Chennai Metro Rail Tamil New : நீண்ட தூர பயணங்களை குறுக்கிய சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), தற்போது திருமங்கலம், வடபழனி மற்றும் ஆலந்தூர் மெட்ரோ நிலையங்களில் e-பைக் சேவைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இவற்றை உபயோகிப்பது மிகவும் சுலபம். மொபைல் செயலி மூலம் இந்த பைக்குகளை முன்பதிவு செய்து பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஹவுடி ஹைர் பைக்குகளுடன் (Howdy Hire Bikes) இணைந்து CMRL இந்த சேவையைத் தொடங்கியிருக்கிறார்கள். பைக்கை முன்பதிவு செய்ய, பயணிகள் ‘Howdy Hire Bikes’ எனும் மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்து பிக்கப் மற்றும் டிராப் இடங்களைத் தேர்ந்தெடுத்து, பைக் கிடைத்தவுடன் அந்த செயலி மூலம் QR- குறியீட்டை ஸ்கான் செய்து லாக்/அன்லாக்/ஸ்டார்ட் மற்றும் பாஸ் (pause) போன்ற செயல்களைக் கட்டுப்படுத்தலாம். நகரின் ஒவ்வொரு 500 மீட்டருக்கும் பிக் அப் மற்றும் டிராப் மையங்கள் இருக்குமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஒரு கிலோமீட்டர் தூரம் மூன்று ரூபாய்க்கும், நிமிடத்திற்கு 10 பைசாவிற்கும் இந்த e-பைக் வசதியைப் பெற முடியும். முதல் சவாரி முற்றிலும் இலவசம். அதனைத் தொடர்ந்து வரும் ஐந்து சவாரிகளுக்கு 50% தள்ளுபடி.
காற்று மற்றும் நீர்த்துளிகள் மூலம் பரவும் வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பதற்காகச் சான்றளிக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பு சானிடைசர்கள் கொண்டு இந்த பைக்குகளை சுத்தம் செய்திருப்பதாக CMRL அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சவாரிக்குப் பிறகும் பைக் மற்றும் ஹெல்மெட் இரண்டும் நன்கு சுத்தப்படுத்தப்படுகின்றன.
“பொதுமக்களிடமிருந்து வரும் பதிலின் அடிப்படையில், மேலும் அதிகமான மெட்ரோ நிலையங்களில் இந்த வசதி கிடைக்கும்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சில நிலையங்களில் ஷேர் ஆட்டோக்கள், செயலி மூலம் இயங்கும் ஷெர் கேப் (Share Cab) மற்றும் மிதிவண்டிகளை இயக்கிக்கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“