உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளருமான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன் ட்விட்டர் சமூக வலைதள நிறுவனத்தை பல லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கினார் (44 பில்லியன் டாலருக்கு வாங்கினார்). ட்விட்டர் அப்போதே நஷ்டத்தில் இயங்கி வந்தது. பலரும் இதுகுறித்து எச்சரித்தனர். இருப்பினும் ட்விட்டர் ஒப்பந்ததை மஸ்க் இறுதி செய்து வாங்கினார்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய முதல் நாள் முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார், மூத்த அதிகாரிகள், ஊழியர்கள் என 50 சதவீதப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்தார். ப்ளூ டிக் வசதிக்கு மாத சந்தா வசூலிக்கப்படும் என அறிவித்தார். அதைத் தொடர்ந்து ட்விட்டரில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அறிவித்தார். அவரின் நடவடிக்கைகளுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் கடும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார். குறிப்பாக அவர் நிறுவனத்தை வாங்கியதையடுத்து மிகப்பெரிய நிறுவனத்தின் விளம்பரதாரர்கள் ட்விட்டரை விட்டு வெளியேற முடிவு செய்தனர். இப்படி பல பிரச்சனைகள் என ட்விட்டர் வாங்கிய சில நாட்களில் 200 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்பை இழந்தார். மேலும் ட்விட்டர் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளையும் நிறுத்தினார். ட்விட்டர் செலவீனங்களை குறைக்க இந்த நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்தார்.
- வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்ற சலுகையை நிறுத்தினார். தனது அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் மூலம் மஸ்க் ஊழியர்களை அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டார். அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய விரும்பாதவர்கள்
உடனடியாக வேலையை ராஜினாமா செய்யவும் எனத் தெரிவித்தார். மேலும் ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
2. செலவுகளைக் குறைக்க, ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மதிய உணவு சலுகையை மஸ்க் நிறுத்தினார்.
3. ட்விட்டர் ஊழியர்களுக்கு இலவச மதிய உணவு வழங்குவதற்காக வருடத்திற்கு சுமார் ரூ.1 பில்லியன் செலவிடப்படுவதாக கூறினார்.
4. அதோடு அலுவலகத்தில் உள்ள சமையல் அறையை மூடினார். அலுவலகத்தில் உள்ள "தேவையற்ற" பொருட்கள் அனைத்தையும் விற்று பணமாக்கி வருகிறார்.
5. ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான சான் ஃபிரான்சிஸ்கோ அலுவலகம் உள்பட நகரின் பல்வேறு இடங்களில் உள்ள அலுவலகத்திற்கு பல நாட்களாக வாடகை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. சுமார் ரூ.1 கோடியே 12 லட்சம் வாடகை பாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்தில் துர்நாற்றம்
இந்நிலையில், மஸ்க் செலவீனங்களை குறைக்கும் வகையில் துப்புரவு பணியாளர்களையும் பணிநீக்கம் செய்துள்ளார். துப்புரவு பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டதால் அலுவலகத்தை சுத்தம் செய்வதற்கு மாற்று ஆட்கள் கிடைக்கவில்லை.
கழிப்பறையில் டாய்லெட் பேப்பர் வைப்பதற்கு கூட ஆள் இல்லை. அலுவலர்கள் தங்கள் வீட்டுகளிலிருந்தே டாய்லெட் பேப்பர் கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளன. ட்விட்டர் தலைமையகத்தில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய ஆட்கள் இல்லாததால், அங்கு துர்நாற்றம் வீசுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/