உலகப் பெருங்கடல்களில் பரவும் இருள்: கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பு - அதிர்ச்சி ரிப்போர்ட்!

காலநிலை மாற்றம் பூமியின் பசுமையை மட்டுமல்ல, கடல்வாழ் உயிரினங்களையும் மிக மோசமாகப் பாதித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளில் உலகின் ஐந்தில் ஒரு பங்கு பெருங்கடல் பகுதி கணிசமாக இருண்டு போயுள்ளதாக புதிய ஆய்வு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.

காலநிலை மாற்றம் பூமியின் பசுமையை மட்டுமல்ல, கடல்வாழ் உயிரினங்களையும் மிக மோசமாகப் பாதித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளில் உலகின் ஐந்தில் ஒரு பங்கு பெருங்கடல் பகுதி கணிசமாக இருண்டு போயுள்ளதாக புதிய ஆய்வு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.

author-image
WebDesk
New Update
Oceans-Darkening

உலகப் பெருங்கடல்களில் பரவும் இருள்: கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பு!

காலநிலை மாற்றம் பூமியின் பசுமையை மட்டுமல்ல, கடல்வாழ் உயிரினங்களையும் மிக மோசமாகப் பாதித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளில் உலகின் ஐந்தில் ஒரு பங்கு பெருங்கடல் பகுதி கணிசமாக இருண்டு போயுள்ளதாக புதிய ஆய்வு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.

Advertisment

இங்கிலாந்தின் பிளைமவுத் பல்கலைக் கழகத்தை (University of Plymouth) சேர்ந்த ஆய்வாளர்கள் டாக்டர் தாமஸ் டேவிஸ், பேராசிரியர் ஸ்மித் தலைமையிலான குழு, 'உலகப் பெருங்கடல்களின் இருள்மயமாதல்' (Darkening of the Global Ocean) என்ற தலைப்பில் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. பெருங்கடல்களின் இந்த அபாயகரமான நிலையை இந்த ஆய்வு வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. கடல்கள் இந்த அளவிற்கு இருண்டு வருவது ஒரு புதிய சூழலியல் நெருக்கடி மட்டுமல்ல, இது கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் நமது கோளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மீதும் மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளனர்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Global oceans are darkening, disrupting life beneath the surface

கடலில் சூரிய ஒளி ஊடுருவும் ஆழம் குறைவதையே 'கடல் இருண்டு போதல்' என்று குறிப்பிடுகின்றனர். ஒளிச்சேர்க்கையை நம்பி வாழும் கடல் பாசிகள் (phytoplankton) போன்ற நுண்ணுயிர்களை நேரடியாகப் பாதிக்கிறது. இந்த நுண்ணுயிர்களே கடல் உணவுச் சங்கிலியின் அடித்தளமாகும். அவற்றின் அழிவு, ஒட்டுமொத்த கடல் சூழலியல் அமைப்பையும் சீர்குலைத்து, மீன்வளம் முதல் பல்லுயிர் பெருக்கம் வரை அனைத்தையும் பாதிக்கும் என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisment
Advertisements

கடல்கள் ஏன் இருண்டு வருகின்றன?

இந்த அபாயகரமான நிகழ்விற்கான காரணங்களையும் ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். கரையோரப் பகுதிகளில் மழையின் காரணமாக விவசாய நிலங்களிலிருந்து வெளியேறும் சத்துக்கள், கரிமப் பொருட்கள் மற்றும் வண்டல் மண் போன்றவை கடலில் கலக்கின்றன. இவை கடலில் 'பாசிப் பெருக்கத்தை' (Algal Blooms) உண்டாக்கி, சூரிய ஒளி கடலுக்குள் ஊடுருவுவதைத் தடுக்கின்றன. திறந்த கடற்பகுதிகளில் கடல் நுண்ணுயிரிகளின் (Plankton) இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள், கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கலாம் என்று ஆய்வு குறிப்பிடுகிறது.

ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

இதுகுறித்து ஆய்வாளர் டாக்டர் டேவிஸ் கூறுகையில், "கடந்த 20 ஆண்டுகளில் கடல் நுண்ணுயிரி சமூகங்களில் ஏற்பட்ட மாற்றங்களால் கடலின் மேற்பரப்பு நிறம் மாறியுள்ளது குறித்து சில ஆய்வுகள் வந்துள்ளன. ஆனால், அந்த மாற்றங்கள் கடலை பரவலாக இருளாக்குகின்றன என்பதை எங்கள் ஆய்வு ஆதாரங்களுடன் நிரூபிக்கிறது," என்றார். 

வாழ்க்கை மற்றும் இனப்பெருக்கத்திற்காக சூரியனையும் சந்திரனையும் நம்பியிருக்கும் விலங்குகளுக்கான வாழ்விடப் பகுதி சுருங்குகிறது. சுவாசிக்கும் காற்று, மீன், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் நமது திறன் மற்றும் இந்த பூமியின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் என அனைத்திற்கும் நாம் பெருங்கடல்களையும் அதன் ஒளி மண்டலங்களையும் (Photic Zones) நம்பியுள்ளோம். இவை அனைத்தையும் கருத்தில் கொள்ளும்போது, எங்கள் கண்டுபிடிப்புகள் உண்மையான கவலைக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளன," என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆய்வில் மற்றொரு ஆச்சரியமான தகவலும் வெளியாகியுள்ளது. உலகப் பெருங்கடல்களின் பெரும் பகுதி இருண்டு வரும் அதே வேளையில், கடந்த 20 ஆண்டுகளில் சில கடல் பகுதிகள் பிரகாசமடைந்தும் (lighter) உள்ளன. இதன்மூலம், கடல்கள் இருண்டுபோகும் தன்மை எல்லா இடங்களிலும் ஒரே சீராக இல்லை என்பது தெளிவாகிறது.

குறிப்பாக, வட கடல், கிழக்கு இங்கிலாந்து கடற்கரை மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதிகள் மற்ற பகுதிகளை விட அதிகமாக ஒளியை இழந்து உள்ளன. அதே சமயம், ஆங்கில கால்வாயின் சில பகுதி போன்ற இடங்களில் கடலில் ஒளி அளவு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் நிலவும் மாறுபட்ட மழைப்பொழிவு, நிலப் பயன்பாடு, கடல் நீரோட்டங்கள் போன்ற சுற்றுச்சூழல் நிலைகளே இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், கவலைக்குரிய மற்றும் மிகத் தெளிவான இருள்மயமாதல் திறந்த கடற்பகுதிகளில்தான் காணப்படுகிறது. குறிப்பாக, ஆர்க்டிக், அண்டார்க்டிக், கல்ஃப் நீரோடைப் பகுதி போன்ற காலநிலை மாற்றத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மண்டலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதேபோல், பால்டிக் கடல் போன்ற கரையோரப் பகுதிகளில், நிலங்களிலிருந்து வண்டல் மண் மற்றும் சத்துக்கள் அரிக்கப்பட்டு கடலில் கலப்பதால், அங்கு சூரிய ஒளி ஊடுருவும் ஆழம் குறைந்துள்ளது.

இருளில் தவிக்கும் கடல் உயிரினங்கள்:

உணவு தேட, நகர, எதிரிகளிடமிருந்து தங்களை மறைத்துக்கொள்ள மற்றும் இனப்பெருக்கம் செய்ய சூரிய மற்றும் சந்திர ஒளியை ஒரு முக்கிய சமிக்ஞையாகப் பயன்படுத்தும் உயிரினங்கள், மிகக் குறைந்த ஆழமுள்ள பகுதிகளுக்குள் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஏற்கனவே பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கும் கடல் உணவு வலைகளை இது மேலும் சீர்குலைக்கும்.

பிளைமவுத் கடல் ஆய்வகத்தின், 'கடல் உயிர் புவி வேதியியல் மற்றும் கண்காணிப்பு' அறிவியல் தலைவர் பேராசிரியர் டிம் ஸ்மித், சூழலியல் அபாயத்தைச் சுட்டிக்காட்டினார். "நாம் நினைப்பதை விட கடல் மிகவும் ஆற்றல் வாய்ந்தது. உதாரணமாக, 24 மணி நேரத்திற்குள் நீரின் ஒளி அளவுகள் பெருமளவில் மாறுபடும் என்பதை நாம் அறிவோம். ஒளியால் நேரடியாகப் பாதிக்கப்படும் விலங்குகளின் நடத்தை, அந்த மாற்றங்களுக்கு மிகவும் உணர்திறன் கொண்டது," என்றார்.

அவர் மேலும், "கடலின் பெரும் பகுதிகளில் ஒளி மண்டலம் சுமார் 50 மீ. வரை குறைந்தால், ஒளியை நம்பியிருக்கும் விலங்குகள் மேற்பரப்புக்கு அருகே வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும். அங்கே உணவுக்காகவும் பிற அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் கடுமையாகப் போட்டியிட நேரிடும். முழு கடல் சூழலியல் அமைப்பிலும் அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வரக்கூடும்," என்று அவர் கூறினார்.

இந்த ஆய்வில், 'காலனஸ் கோபிபாட்கள்' (Calanus copepods) என்ற அதிக ஒளி உணர்திறன் கொண்ட விலங்கு மிதவை நுண்ணுயிரிகள் (zooplankton) முக்கிய குறிகாட்டி இனமாக பயன்படுத்தப்பட்டன. இந்த உயிரினங்கள் கடல் உணவுச் சங்கிலியின் மையத்தில் இருப்பதுடன், பகல் நேரங்களில் செங்குத்தாக இடம்பெயர்வதற்கும் மற்ற நடத்தைகளுக்கும் சூரியன் மற்றும் சந்திரனின் மிக மெல்லிய ஒளி சமிக்ஞைகளையே நம்பியுள்ளன. எனவே, கடலில் ஒளி குறைவது இந்த உயிரினங்களை நேரடியாகவும் கடுமையாகவும் பாதிக்கிறது.

இந்த ஆய்வின் முடிவுகள், கடல்கள் இருண்டு வருவதை, சமீப காலங்களில் நிகழ்ந்த மிகப் பெரிய உலகளாவிய வாழ்விட இழப்புகளில் ஒன்றாகக் கருதுகின்றன. ஒளியை நம்பி வாழும் விலங்குகள், குறுகிய செங்குத்தான இடங்களுக்குள் வாழ வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றன. இதனால், அவ்வுயிரினங்கள் மற்ற இரைகொல்லி விலங்குகளால் வேட்டையாடப்படும் அபாயம் அதிகரிப்பதோடு, உணவு மற்றும் பிற வளங்களுக்கான போட்டியும் கடுமையாகிறது. காலப்போக்கில், இது கடலின் பல்லுயிர் பெருக்கத்தை முற்றிலுமாக அழித்து, பெருங்கடல்களின் கார்பன் சுழற்சி மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்தியைச் சீர்குலைக்கும்.

Science Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: