உலகின் மிகப்பெரிய பைக் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், பைக் பிரியர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 பைக்கின் இந்திய அறிமுக தேதியை வெளியிட்டுள்ளது.
அந்நிறுவனத்தின் அறிவிப்பின் படி, வரும் ஜனவரி 30ம் தேதி, டெல்லியில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், ஹீரோவின் அடுத்த வெளியீடு எக்ஸ்ட்ரீம் 200S மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஆட்டோ எக்ஸ்போ 2016 நிகழ்வில் எக்ஸ்ட்ரீம் 200S கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய கான்செப்ட் மாடல் பைக், டைமண்ட் ஃபிரேம் சேசிஸ் மூலம் உருவாக்கப்படுகிறது. டூயல் டோன் நிறங்களில், காண்ட்ராஸ்ட் கலர் சீட், ஸ்போர்ட் தோற்றம் கொண்ட மட்கார்டு மற்றும் மல்டி-ஸ்போக் அலாய் வீல் கொண்டிருக்கிறது.
இந்த மாடல் வழக்கமான ஃபோர்க் மற்றும் பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன், இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், மல்டி-ஸ்போக் அலாய் வீல் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் புதிய மாடலில் ஸ்ப்லிட் கிராப் ஹேன்டிள், எல்இடி டெயில் லேம்ப், அனலாக் டிஜிட்டல் மீட்டர் கன்சோல் உள்ளிட்ட அம்சங்களும், ABS வசதி கூடுதல் ஆப்ஷனாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S மாடலில் ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் 4-ஸ்டிரோக் 200சிசி இன்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 18.5 பி.எச்.பி. பவர், 8500 ஆர்.பி.எம். மற்றும் 17.2 என்.எம். டார்கியூ, 6000 ஆர்.பி.எம். மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S மாடல் பஜாஜ் பல்சர் NS200, கே.டி.எம். 200 டியூக் மற்றும் டி.வி.எஸ். அபாச்சி RTR 200 4V உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும். புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S விலை ரூ.1 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.