New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/04/dolby-cinema-2025-07-04-11-21-48.jpg)
இந்தியாவின் முதல் 'டால்பி' சினிமா தியேட்டர் திறப்பு: எங்கு தெரியுமா?
அதிநவீன பொழுதுபோக்கு தொழில்நுட்பத்தில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் டால்பி (Dolby) நிறுவனம், இந்தியாவின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தியேட்டரை மகாராஷ்டிர மாநிலம் புனேவில் திறந்துள்ளது.
இந்தியாவின் முதல் 'டால்பி' சினிமா தியேட்டர் திறப்பு: எங்கு தெரியுமா?
சினிமா ரசிகர்களுக்கு குட்நியூஸ்! அதிநவீன பொழுதுபோக்கு தொழில்நுட்பத்தில் உலகளவில் முன்னணியில் இருக்கும் டால்பி (Dolby) நிறுவனம், இந்தியாவின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தியேட்டரை மகாராஷ்டிர மாநிலம் புனேவில் திறந்துள்ளது. சிட்டி பிரைட் மல்டிபிளக்ஸ், காரடியில் (City Pride Multiplex, Kharadi) திறக்கப்பட்ட இந்த புதிய தியேட்டர், ரசிகர்களுக்கு பிரீமியம் திரைப்பட அனுபவத்தை வழங்குகிறது. நேற்று (புதன்கிழமை, ஜூலை 3) அன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
அதிநவீன தொழில்நுட்பத்தின் சங்கமம்:
இந்த டால்பி சினிமா தியேட்டர், டால்பி விஷன் (Dolby Vision) தொழில்நுட்பத்தின் அதி துல்லியமான காட்சித் தெளிவையும், டால்பி அட்மாஸ் (Dolby Atmos) தொழில்நுட்பத்தின் அதிவேக ஒலி அனுபவத்தையும் ஒருங்கிணைத்து வழங்குகிறது. இது திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்கிறது. மேலும், இதுவரை இந்தியாவில் டால்பி விஷன் டூயல் 4Kலேசர் புரொஜெக்ஷன் சிஸ்டம் பொருத்தப்பட்ட ஒரே தியேட்டர் இதுஎன்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பு மேம்படுத்தப்பட்ட காட்சிகள் மற்றும் துடிப்பான விவரங்களை திரையில் கொண்டு வருகிறது.
திரையரங்கின் உட்புற வடிவமைப்பு அதன் தனித்துவ ஒலி-காட்சி அனுபவத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் நுணுக்கமாக உருவாக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள இருக்கை வசதிகள், எந்த இடையூறும் இல்லாத தெளிவான பார்வைக்கோணத்துடன் பிரீமியம் அனுபவத்தை உறுதி செய்கின்றன. டைனாமிக் லைட்டிங் (Dynamic Lighting) மற்றும் சுவர் முதல் சுவர், மேற்கூரை வரை நீளும் வளைந்த திரை ஆகியவை பார்வையாளர்களை கதையுடன் முழுமையாக ஒன்றிணைய உதவுகின்றன. கவனச் சிதறல்களைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த அறை, பார்வையாளர்களுக்கு முழுமையான ஈடுபாட்டை வழங்குகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
டால்பி லேபரட்டரீஸின் உலகளாவிய சினிமா விற்பனை மற்றும் கூட்டாளர் மேலாண்மை துணைத் தலைவர் மைக்கேல் ஆர்ச்சர் இதுகுறித்துப் பேசுகையில், "ஒவ்வொரு சிறிய விவரத்தையும் கருத்தில்கொண்டு திரையரங்கை நாங்கள் வடிவமைத்துள்ளோம். முன்பதிவு செய்யக் கூடிய, இருக்கைகள், தெளிவான பார்வைக்கோணங்கள், மென்மையான உட்புற விளக்குகள் மற்றும் உயர்தர அம்சங்கள் என அனைத்தும் பிரீமியம் திரைப்பட அனுபவத்தை வழங்கும். இந்திய பார்வையாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த திரைப்பட அனுபவங்களைத் திறக்கும் வகையில் மேலும் பல திரையரங்குகளைத் தொடங்க ஆவலுடன் உள்ளோம்," என்று தெரிவித்தார்.
இந்த புதிய டால்பி சினிமா தியேட்டர் திறக்கப்பட்டதன் மூலம், புனேவின் சிட்டி பிரைட் காரடி, லண்டன், டோக்கியோ மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் உள்ள டால்பி சினிமாக்களின் உலகளாவிய நெட்வொர்க்கில் இணைந்துள்ளது. இந்த பிரீமியம் திரையரங்கில் இன்று காலை 10:45 மணிக்கு ஜுராசிக் வேர்ல்ட் ரிபர்த் (Jurassic World Rebirth) திரையிடலுடன் டால்பி சினிமா தனது பயணத்தைத் தொடங்கியது. இந்த திரையரங்கில் 310 பேர் அமரக்கூடிய வசதியுடன் 4 வகையான இருக்கை விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல் 6 வரிசைகளில் 3D Vision Classic, 7 முதல் 13-வது வரிசைகளில் 3D Vision XL , 8 முதல் 12-வது வரிசைகளில் 3D Vision Prime, 14-வது வரிசையில் 3D Vision Sofa அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திரையரங்கிற்கான டிக்கெட்டுகள் ஜூலை 6 வரை BookMyShow தளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. டால்பி நிறுவனம், புனேவைத் தொடர்ந்து ஹைதராபாத், பெங்களூரு, திருச்சி, உளிக்கால் மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில் மேலும் 5 டால்பி சினிமாக்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது. இது இந்திய சினிமா ரசிகர்களுக்கு புதிய, அற்புதமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.