சமீப காலமாக சிம் கார்டு மோசடிகள் அதிகரித்து வருவதால், உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி வேறு யாராவது மொபைல் இணைப்பை உங்களுக்கே தெரியாமல் பதிவு செய்திருக்க வாய்ப்புள்ளது. இதை கண்காணிக்க, தொலைத்தொடர்புத் துறை (DoT) எளிய கருவியை கொண்டு வந்துள்ளது. சஞ்சார் சாத்தி இணையதளத்தில் TAFCOP (Telecom Analytics for Fraud Management and Consumer Protection) என்ற அமைப்பின் மூலம், உங்கள் அடையாள அட்டையில் எத்தனை மொபைல் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை நீங்கள் எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்.
அரசாங்க விதிகளின்படி, ஒரு ஆதார் எண்ணுடன் இந்தியா முழுவதும் அதிகபட்சமாக 9 சிம்கார்டுகளைப் பயன்படுத்தலாம். ஜம்மு & காஷ்மீர், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 6 சிம்கார்டுகள் வரை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.
உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள சிம்களைச் சரிபார்க்கும் முறை:
முதலில், sancharsaathi.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லுங்கள். 'Citizen Centric Services' என்ற பகுதிக்குச் சென்று, அதில் 'Know Your Mobile Connections' என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் 10 இலக்க மொபைல் எண்ணையும், திரையில் தோன்றும் கேப்ட்சா குறியீட்டையும் உள்ளிடவும். உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை (OTP) உள்ளிடவும். இப்போது, உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அனைத்து மொபைல் எண்களின் பட்டியலும் திரையில் தோன்றும்.
உங்களுக்குத் தெரியாத சிம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் பட்டியலில் உங்களுக்குச் சொந்தமில்லாத ஏதேனும் எண்ணைக் கண்டால், அந்த எண்ணை தேர்ந்தெடுத்து "Not My Number" என்ற விருப்பத்தைக் கிளிக் செய்து புகாரளிக்கலாம். அதேபோல், நீங்கள் பயன்படுத்தாத அல்லது தேவைப்படாத சிம்களை "Not Required" என்ற விருப்பத்தின் மூலம் செயலிழக்கச் செய்யலாம். உங்கள் கோரிக்கை சரிபார்க்கப்பட்டதும், தேவையில்லாத எண்கள் செயலிழக்கப்படும். மேலும், உங்கள் ஆதார் எண்ணுடன் 9-க்கு மேல் சிம்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதுகுறித்தும் உங்களுக்கு SMS மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.