இந்தியா நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை கொண்டுள்ளது. மேலும், விண்வெளியில் தனக்கென சொந்தமாக பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் (பி.ஏ.எஸ்.) எனப்படும் விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைக்க திட்டமிட்டு உள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வருகிற 2035-ம் ஆண்டுக்குள் இதை விண்வெளியில் நிறுவ பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான விண்கலங்கள் 2028 முதல் விண்ணில் தொடர்ந்து செலுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்பட உள்ளன. இத்தகைய விண்வெளி திட்டங்களுக்கு, ஒருநாடு ஸ்பேடெக்ஸ் (SPADEX - ஸ்பேஸ் டாகிங் எக்ஸ்பிரிமென்ட்) எனும் நுட்பத்தின் கீழ் விண்வெளியில் செயற்கைக்கோள்களை ஒருங்கிணைத்தல், விடுவித்தல் ஆகிய பரிசோதனைகளில் வெற்றி பெறுவது அவசியமாகும்.
இதற்காக இஸ்ரோ, கடந்த டிசம்பர் 30-ந் தேதி 2 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தியது. பின்னர் அவற்றின் சுற்றுவட்டப்பாதை இடைவெளிகளை சிறிது சிறிதாக குறைத்து ஜனவரி 16-ந் தேதி 2 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டன. இதன்மூலம் 'விண்வெளி டாக்கிங்' தொழில்நுட்பத்தை கொண்ட 4-வது நாடு எனும் பெருமையை பெற்று இந்தியா சாதனை படைத்தது. பின்னர் மார்ச் 13-ந் தேதி இந்த இரட்டை செயற்கைக்கோள்கள் மீண்டும் பிரிக்கப்பட்டு சோதனை நடந்தது.
இந்நிலையில், இஸ்ரோ நிறுவனம், நேற்று 2-வது முறையாக ஸ்பேடாக்கிங் முறையில் 2 செயற்கைக்கோள்களை இணைக்கும் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்ட எக்ஸ் வலைத்தள பதிவில், "இஸ்ரோ 2-வது ஸ்பேடாக்கிங் முறையில் செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக இணைத்ததை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறி உள்ளார். இதன்மூலம் இந்த சாதனையை அடைந்த உலகின் நான்காவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.