அண்மையில் பி.எஸ்.எல்.வி. - சி60 ராக்கெட்டில் அனுப்பபட்ட இஸ்ரோவின் 2 செயற்கைக் கோள்கள் ஸ்பேடெக்ஸ் டாக்கிங் திட்டம் மூலம் விண்வெளியில் நாளை(ஜன.7) இணைக்கப்படவிருந்த நிலையில் , ஜன.9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தையும், வரும் 2035ல் விண்வெளியில் விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைக்கவும் திட்டமிட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக, இஸ்ரோவின், 14 ஆய்வு கருவிகள் மற்றும் கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள 10 ஆய்வு கருவிகள் ஆகியவற்றை சுமந்தபடி, இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., - சி60 ராக்கெட், ஆந்திர மாநிலம், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து டிசம்பர் 30ம் தேதி இரவு 10:00 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
பூமியில் இருந்து புறப்பட்ட 15 நிமிடங்கள், 15வது வினாடியில், ஸ்பேடெக்ஸ் - பி செயற்கைக்கோளை திட்டமிட்டபடி, 476.84 கி.மீ., உயரமுள்ள புவி வட்டப்பாதையில் ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. அதை தொடர்ந்து, 476.87 கி.மீ., உயரமுடைய வட்டப் பாதையில் ஸ்பேடெக்ஸ் - ஏ செயற்கைக்கோள் நிலைநிறுத்தப் பட்டது. இரண்டு செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் மிஷன் டாக்கிங் சோதனைத் திட்டம் நாளை (ஜன.,07) காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
செயற்கைக் கோள்களை இணையச் செய்வது குறித்த 'சிமுலேசன்' சோதனைகள் செய்யும் வேலை நடைபெறுகிறது. இதனால், இந்த சோதனை ஜன.9ம் தேதிக்கு ஒத்திவைக்கபடுகிறது என இஸ்ரோ அறிவித்துள்ளது.