ஜியோ நெட்வொர்க்கின் காலிங், எஸ்.எம்.எஸ் சேவைகள் இன்று (நவம்பர் 29) காலை பல்வேறு பகுதிகளில் முடங்கியதால் பயனர்கள் சிரமத்திற்குள்ளாகினர். OTP பெற முடியாமல் பயனர்கள் தவித்ததாக புகார். அதன்பின் சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு சேவைகள் செயல்பட தொடங்கின.
இந்தியாவின் முன்னணி தகவல் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்று ஜியோ. நாடு முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பின் சில நகரங்களில் முதற்கட்டமாக 5ஜி சேவையும் வழங்கி வருகிறது. அம்பானி குழுமத்திற்கு சொந்தமான
ஜியோ, ஆண்ட்ராய்டு போன், லேப்டாப் போன்றவற்றை வழங்கி வருகிறது.
இந்நிலையில், இன்று காலை 6 மணியளவில் ஜியோவின் காலிங், எஸ்.எம்.எஸ் சேவைகள் பல்வேறு பகுதிகளில் முடங்கியதாக பயனர்கள் புகார் தெரிவித்தனர். மும்பை, கொல்கத்தா, டெல்லி நகரங்களில் சேவை முடங்கியதாக கூறப்படுகிறது. மொபைல் டேட்டா வசதிகள் வேலை செய்ததாகவும், ஆனால் காலிங், எஸ்.எம்.எஸ் சேவைகள் செயல்பட வில்லை என்று புகார் அளித்தனர்.
ஜியோ சேவை பாதிப்பு குறித்து ஏராளமான பயனர்கள் ட்விட்டரில் பதிவிட்டனர். காலை 6 மணி முதல் 9 மணி வரை சேவை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜியோவின் முந்தைய கால பாதிப்புகள் சில மணி நேரங்களில் மீட்கப்பட்டதாகவும் ஆனால் தற்போதைய செயலிழப்பு 3 மணி நேரம் நீடித்தாகவும் கூறப்பட்டுள்ளது.
ஜியோ நிறுவனம் தற்போதைய செயலிழப்பு குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை.
இருப்பினும் தற்போது சேவைகள் மீட்கப்பட்டு, செயல்படுகின்றன. சேவை முடக்கத்திற்கான காரணம்
இன்னும் தெரியவில்லை.
இதேபோன்று ஜியோ சேவைகள் இந்தாண்டு அக்டோபர், ஜூன் மற்றும் பிப்ரவரி மாதங்களில் முடங்கியது. அப்போது பயனர்கள் டேட்டா, காலிங் வசதி பயன்படுத்த முடியவில்லை என்று தெரிவித்தனர்.