கோவை, மே 31: கோவை சாரமேடு பகுதியில் உதவும் உள்ளங்கள் பொதுநல அறக்கட்டளை சார்பில் துவங்கப்பட்ட அர்-ரஹ்மான் அகாடமியின் பெண்களுக்கான கட்டணமில்லா கல்வியக திறப்பு விழா நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர் அப்துல் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், காவல் உதவி ஆணையாளர் அஜய் தங்கம் மற்றும் கல்வி பூங்காக்கள் மற்றும் விளையாட்டுக்குழு தலைவர் மாலதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு
விழாவில் பேசிய காவல் உதவி ஆணையாளர் அஜய் தங்கம், மாணவிகளின் பாதுகாப்பு குறித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
/indian-express-tamil/media/media_files/2025/05/31/sJBH7uIn6l6DqdYkAx1s.jpeg)
தமிழ்நாடு காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட 'காவல் உதவி' ஆண்ட்ராய்டு செயலியின் பயன்பாடுகள் மற்றும் 'போலீஸ் அக்கா' திட்டம் குறித்து அவர் விரிவாக விளக்கினார். மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க, இலவச டியூஷன் மையங்கள் சிறந்த மாற்றுப்பாதையை ஏற்படுத்தும். மாணவிகள் தங்களின் ஓய்வு நேரங்களை இதுபோன்ற இலவச கல்வி நிலையங்களில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
பெண் கல்வி மற்றும் ஆளுமை வளர்ச்சி
மாலதி, பெண் கல்வியின் அவசியம் மற்றும் சமூகத்தில் பெண்கள் சிறந்த ஆளுமைகளாக உருவெடுக்க வேண்டும் என்ற இலட்சிய உணர்வை எடுத்துரைத்தார்.
பாராட்டு மற்றும் பரிசளிப்பு
இந்த நிகழ்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு அர்-ரஹ்மான் அகாடமி சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த விழாவில், 86-வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு. அஹமது கபீர் நன்றியுரை கூறினார்.
(பி. ரஹ்மான், கோவை மாவட்டம்)