பழம்பெரும் பரதநாட்டியக் கலைஞரான மிருணாளினி சாராபாய் பிறந்த நாளை கொண்டாடும் வகையில், கூகுள் நிறுவனம், இன்றைய கூகுள் டூடுளில் அவரின் புகைப்படத்தை வைத்து சிறப்பித்துள்ளது.
மே மாதம் 11, 1918 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் பிறந்த மிருணாளினி சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் எம்.பி.யுமான அம்மு சுவாமிநாதனின் மகள் ஆவர். சிறு வயதில் இருந்தே நடனத்தில் ஆர்வம் கொண்டிருந்த மிருணாளினி பல மேடை நடனங்களில் ஆடி தனது திறமையை வளர்த்துக் கொண்டார்.
அகமதாபாத்தில் 1948-ல் தர்பணா கலை அகாடமி தொடங்கிய இவர், 18,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரதம், கதகளி ஆகிய கலைகளை பயிற்றுவித்து அவர்களையும் மிகச் சிறந்த கலைஞர்களாக உருவாக்கினார். பரதநாட்டியம், கதகளி, மோகினியாட்டம் உள்ளிட்ட நாட்டியக்கலைகளில் வல்லவராக திகழ்ந்த மிருணாளினி வாழும் காலங்களில் அடைந்த புகழ் ஏராளம்.
இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட விக்ரம் சாராபாயை மணமுடித்த மிருணாளினிக்கு மல்லிகா, கார்த்திகேயா என்ற பிள்ளைகள் உள்ளனர். நடனம் மட்டுமல்லாமல், கவிதை, கட்டுரை எழுதுதல் முதலியவற்றிலும் ஆர்வமிக்கவராகவும் திகழ்ந்தார்.
மிருணாளினியின் பழைய புகைப்படம்
மிருணாளி இறப்பதற்கு முன்பு வரை 300க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளுக்கு நடனம் பயிற்றுவித்தார். அதுமட்டுமல்லாமல், தனது நடனத்தின் மூலம், குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களிடமிருந்து பாராட்டை பெற்றுள்ளார். இன்று (11.5.18) மிருணாணிக்கு 100 ஆவது பிறந்த நாள். இத்தனை சிறப்பு மிக்க கலைஞரின் பிறந்த நாளை நினைவுக்கூறும் விதமாக கூகுள் நிறுவனம், இன்று தனது முகப்பு பக்கத்தில், மிருணாளி அவர்களின் புகைப்பத்தை வைத்து சிறப்பித்துள்ளது.
தனது நடனத்தால் அனைவரையும் கவர்ந்த மிருணாளினி சாராபாய், ஜனவரி 21, 2016ம் ஆண்டு மறைந்தார். அவரின் இறப்புக்கு அப்போதையை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட பல அரசியல் தலைவர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தனர்.