பூமியின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட்டை விட 2 மடங்கு உயரமுள்ள செவ்வாய் கிரகத்தின் பிரம்மாண்டமான எரிமலையை நாசாவின் விண்கலம் படம் பிடித்துள்ளது. இந்த பிரமிக்க வைக்கும் புகைப்படம், செவ்வாய் கிரகத்தின் வானிலை மற்றும் வளிமண்டலம் பற்றிய புதிய தகவல்களை விஞ்ஞானிகளுக்கு வழங்கியுள்ளது.
ஆர்சியா மான்ஸ் (Arsia Mons) என்றழைக்கப்படும் இந்த எரிமலை, சுமார் 20 கி.மீ. (12 மைல்) உயரம் கொண்டது. இது எவரெஸ்ட் சிகரத்தை (சுமார் 8.8 கி.மீ) விட 2 மடங்குக்கும் அதிகமான உயரமாகும்.
/indian-express-bangla/media/media_files/2025/06/08/RzFvdmTlzl0KL9VPDVHc.jpg)
நாசாவின் 20 ஆண்டுகளுக்கும் மேலாக செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் 'மார்ஸ் ஒடிஸி' (Mars Odyssey) விண்கலம், கடந்த மே 2, 2025 அன்று இந்த அரிய புகைப்படத்தை எடுத்துள்ளது. இதில் உள்ள தெர்மல் எமிஷன் இமேஜிங் சிஸ்டம் (THEMIS) என்ற கருவி மூலம், செவ்வாய் கிரகத்தின் அதிகாலை நேர மேகக் கூட்டங்களுக்கு இடையே ஆர்சியா மான்ஸ் எரிமலையின் உச்சி தெளிவாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படம் பக்கவாட்டில் இருந்து எடுக்கப்பட்டிருப்பதால், விண்வெளி வீரர் தனது விண்கலத்தில் இருந்து பார்ப்பது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. இது செவ்வாய் கிரகத்தின் பருவகால மாற்றங்களையும், அதன் மெல்லிய வளிமண்டலத்தில் தூசு மற்றும் பனிக்கட்டி மேகங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதையும் ஆய்வு செய்ய விஞ்ஞானிகளுக்கு பெரிதும் உதவுகிறது.
தார்சிஸ் மான்டெஸ் எனப்படும் எரிமலை பீடபூமியில் அமைந்துள்ள மூன்று பெரிய எரிமலைகளில் தெற்கே உள்ள எரிமலை இந்த ஆர்சியா மான்ஸ் ஆகும். இதன் உச்சிப்பகுதியில் வளிமண்டல அழுத்தம், பூமியின் கடல் மட்ட அழுத்தத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இந்த புகைப்படம், செவ்வாய் கிரகத்தின் மர்மங்களை வெளிக்கொணர்வதில் நாசாவின் தசாப்த கால பயணத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.