செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வரவு தகவல் தொழிநுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் பிரம்மிக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மருத்துவ துறையிலும் அப்படியொரு புதுவித மாற்றத்தை உருவாக்கியுள்ளது. ஊசியில்லாமல் ரத்தம் இல்லாமல் நோய் பாதிப்பு கண்டறிதலை ஏஐ சாத்தியமாக்கியுள்ளது.
குயிக் வைட்டல்ஸ் என்ற புதிய செயலி முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலமாக ரத்தப் பரிசோதனை செய்வதை சாத்தியமாக்கியுள்ளது. இந்த கண்டுபிடிப்பு இந்தியா முழுவதும் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளில் ரத்த சோகைக்கான ஆரம்பகால சுகாதார பரிசோதனையை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது ஒரு எளிய ரத்த பரிசோதனை முறை. உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதை கண்டறிந்து தெரிவிக்கும் முக்கியமான கருவி. இதன் மூலம், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் சரிபார்க்க முடியும். தொற்றுகளை கண்டறியலாம், சர்க்கரை, கொழுப்பு, இரும்புச் சத்து அளவை அளவிடலாம்.
இதன்மூலம், எந்தவொரு நோயின் ஆரம்ப அறிகுறிகளையும் முன்னரே கண்டறிந்து வேகமாக சிகிச்சை எடுக்க மருத்துவர்களுக்கு வழிகாட்டும். ஊசிகள், ரத்த மாதிரிகள் உதவியில்லாமல் பரிசோதனைகளை மேற்கொண்டு முடிவுகளை அறிய இந்த ஏஐ அடிப்படையிலான செயலி பெரிதும் உதவுகிறது. இந்த ஏஐ செயலி நமது முகத்தை 20 வினாடிகளுக்குள் ஸ்கேன் செய்வது நமது உடலுக்குள் உள்ள ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின், இதயத்துடிப்பு, ஆக்சிஜன் செறிவு, சுவாசம் மற்றும் மன அழுத்தத்தின் அளவுகளை துல்லியமாக கண்டறிந்து முடிவுகளை வழங்குகிறது.
குயிக் வைட்டல்ஸ் செயலி 2024- ம் ஆண்டில் அறிமுகமானது. ஹைதராபாத்தில் உள்ள அரசு நிலோபர் மருத்துவமனையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மகப்பேறு வார்டில், கர்ப்பிணிப் பெண்களுக்கு இரும்புச்சத்து குறைவாக உள்ளதா என பரிசோதிக்க இது பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் பரவலான சுகாதாரப் பிரச்சினையான ரத்த சோகையை கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க இது பெரிதும் உதவியது. இந்த நிலையில் தற்போது மகாராஷ்டிராவில் இந்த செயலியை அறிமுகப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ரத்தப் பரிசோதனைகள் மற்றும் அடிப்படை சுகாதாரம் சவாலாக இருக்கும் தொலைதூர பழங்குடிப் பகுதிகளுக்கு படிப்படியாக இந்த செயலியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.
குயிக் வைட்டல்ஸ் கருவியை அறிமுகப்படுத்திய பிசாம் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனர் ஹரிஷ் பிசாம் கூறுகையில், “ ஊசிகள் தேவையில்லாத விரைவான சுகாதார மதிப்பீடுகளை இது வழங்குகிறது. ஒரு நிமிடத்துக்குள் முடிவுகளை அறிவிக்கிறது. போட்டோபிளெதிஸ்மோகிராபி (PPG) என்ற முறையைப் பயன்படுத்தி இந்த கருவி இயங்குகிறது.
இது ஒளி சமிக்ஞைகளைப் புரிந்துகொள்ளவும் துல்லியமான அளவீடுகளை வழங்கவும் இணைந்து செயல்படும் பல வழிமுறைகளின் கலவையாகும். பாரம்பரிய பரிசோதனைகளுடன் ஒப்பிடு்ம்போது இந்த கருவியின் முடிவுகள் உலக சுகாதார கூட்டமைப்பு வரம்புகளுக்குள் சிறப்பாக செயல்படுகிறது" என்கிறார்.