கூகுள் பே, போன் பே மூலம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது. எல்லா வேலைகளும் நவீனமாக மாறிவருகிறது. ஷாப்பிங் முதல் மளிகை பொருட்கள் வாங்குவது வரை அனைத்தும் ஆன்லைன் மையமாகி விட்டது. பெரிய கடைகள் முதல் சிறிய கடைகள் வரையில் டிஜிட்டல் பேமண்ட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்தால் போது நம் வங்கி கணக்கில் இருந்து அவர்களுக்கு நேரடியாக பணம் செலுத்தலாம்.
அந்த வகையில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலியான போன் பே புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி போன்பே செயலியில் உள்ள யு.பி.ஐ ஐடி (UPI)பயன்படுத்தி வெளிநாடுகளிலும் பரிவர்த்தனை செய்யலாம்.
தற்போது சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), மொரீஷியஸ், பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் பணப் பரிவர்த்தனை செய்யலாம். NIPL (NPCI இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட்) நிறுவனத்துடன் இணைந்து இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. நிறுவனம் எதிர்காலத்தில் மேலும் பல நாடுகளில் ‘UPI இன்டர்நேஷனல்’(UPI International) அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
போன் பே இணை நிறுவனர் ராகுல் சாரி கூறுகையில், UPI இன்டர்நேஷனல் என்பது உலகின் பிற பகுதிகளுக்கும் UPI அனுபவத்தை வழங்குவதற்கான முதல் முக்கிய படியாகும். இந்த அம்சம் நிச்சயம் ஒரு கேம்சேஞ்சராக இருக்கும் என்றும்,
வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் வெளிநாடுகளில் உள்ள கடைகளில் போன் பே மூலம் பணம் செலுத்தலாம் என்றும் கூறினார். மேலும் பல நாடுகளிலும் வருங்காலங்களில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை முன்னெடுப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று சாரி கூறினார்.
எப்படி பயன்படுத்துவது?
பயனர்கள் UPI இன்டர்நேஷனல் செயலியில் தங்கள் வங்கி கணக்கை இணைக்க வேண்டும். பின்னர் பயனர்கள் தங்கள் UPI பின்னை செலுத்தி பயன்படுத்த வேண்டும்.
பயனர்கள் இந்திய வங்கிகளைப் பயன்படுத்தி பணம் செலுத்துவர், பணம் பெறும் வெளிநாட்டு வணிகருக்கு உள்ளூர் நாணய மதிப்பில் பணம் செலுத்தப்படும். இது சர்வதேச கிரெடிட், டெபிட் மற்றும் ஃபாரெக்ஸ் கார்டுகளின் தேவையை நீக்குகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய இரண்டு சாதனங்களிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/