PUBG Mobile Tamil News: தகவல் தொழில்நுட்ப சட்டம் 69A பிரிவின் கீழ், இந்த மாதத் தொடக்கத்தில் பப்ஜி மொபைலை இந்திய அரசு தடை செய்தது. நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு போன்றவற்றுக்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களில் இந்த செயலி ஈடுபட்டுள்ளது என இதற்கு அரசாங்கம் விளக்கமளித்தது. இதனைத் தொடர்ந்து, விளையாட்டின் முதன்மை டெவலப்பரான பப்ஜி கார்ப்பரேஷன், இந்தியாவில் இந்த விளையாட்டுக்கான விநியோக உரிமையை Tencent-லிருந்து ரத்து செய்துவிட்டு, அதனைத் தானே சொந்தமாக வெளியிடுவதாக அறிவித்திருக்கிறது.
ஆண், பெண் எனப் பாலின பாகுபாடுகள் இன்றி அனைத்து இளைஞர்களையும் ஓரிடத்திலேயே கட்டிப்போட்ட இந்த பப்ஜி கேம் இப்போது பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. ஏற்கெனவே பதிவிறக்கம் செய்து, அதனை இணையத்தோடு இணைக்க இந்திய ஐஎஸ்பியைப் (ISP) பயன்படுத்தினாலும், இந்த விளையாட்டு சர்வரில் இட ஒதுக்கீட்டைப் பெறமுடியாத காரணத்தினால், விளையாட முடியாமல் போகிறது. இந்த விளையாட்டை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கு உள்ளூர் பார்ட்னர்களை பப்ஜி கார்ப்பரேஷன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.
பப்ஜி கார்ப்பரேஷன் ரிலையன்ஸ் ஜியோவுடன் கைகோர்க்கவுள்ளதா?
ராயல் போர் விளையாட்டான பப்ஜியை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டுவருவதற்காக ரிலையன்ஸ் ஜியோவுடன் PUBG கார்ப்பரேஷன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என ஹிந்து பிசினஸ் லைன் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில், இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பக் கட்டத்தில் உள்ளன என்றும் இந்த பார்ட்னர்ஷிப்புக்கான ஒப்பந்தம் எவ்வாறு கட்டமைக்கப்படலாம் என்பது குறித்த விவரங்களை இரு நிறுவனங்களின் அதிகாரிகளும் உருவாக்கி வருவதாகவும் மேற்கோளிடப்பட்டுள்ளது.
இரு நிறுவனங்களும் தங்களின் வருவாயைப் பிரிப்பதற்கான விவரங்களை உருவாக்க தங்கள் சட்டக் குழுக்களை நியமித்துள்ளன. அதன் அடிப்படையில் 50:50 பங்கு மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களின் அடிப்படையில் PUBG கார்ப்பரேஷனுக்கு வருவாயை உத்தரவாதம் செய்யும் விதம் என தற்போது வரை இந்த இரண்டு சாத்தியக்கூறுகள் உள்ளன.
இவை வெறும் ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தைகள் மட்டுமே. எதிர்காலத்தில் இது ஒப்பந்தத்தில் ஈடுபடாமல்கூட போகலாம். இருப்பினும், அவர்கள் வெளியேறினால், அது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் கேமிங் மார்க்கெட்டில் தடம் பதிக்க உதவும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி, ஒருமுறை மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாடெல்லாவை சந்தித்து பேசியபோது பேசியபோது, “இசை, திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட கேமிங் உலகம் மிகவும் பெரியது. மேலும், இது இந்தியாவில் வளர பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது" என்று கூறியது குறிப்பிடப்பட்டது.
இது தவிர, மைக்ரோசாஃப்ட் தன்னுடைய xCloud கேம் ஸ்ட்ரீமிங் சேவையை இந்தியாவில் தொடங்க ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து செயல்படுவதைச் சமீபத்தில் உறுதிப்படுத்தியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"