ஸ்மார்ட்ஃபோன் தொழில்நுட்பம் கடந்த 10 வருடங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் புதிய தொழில்நுட்பங்களை தாங்கள் தயாரிக்கும் ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்தி வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தி வருகின்றன. குறிப்பாக ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்தப்படும் பேட்டரியில் பல்வேறு புதிய அம்சங்களை சோதனை செய்து வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டுகளில் 6,500 mAh - 7,200 mAh வரையிலான திறன் கொண்ட போன்கள் சந்தையில் வெளிவந்துள்ளன. தற்போது அதிலிருந்து ஒருபடி மேலேசென்று ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி 10,000 mAh திறன் பேட்டரியைக் கொண்டுள்ள ஸ்மார்ட்ஃபோனை வடிவமைக்க உள்ளது.
தற்போது கான்செப்டாக மட்டும் இருக்கும் இந்த ஸ்மார்ட்ஃபோனுக்கான உரிமத்தை ரியல்மி நிறுவனம் தன்னகத்தே வைத்துள்ளது. பேட்டரித் திறன் அதிகமாக இருப்பதால் பார்ப்பதற்கு செங்கல்லைப் போல தடிமனாக இருக்கும் என்று நாம் கருத வேண்டியதில்லை. நவீன சிலிக்கான் பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் எடை குறைவாகவும், மிகவும் ஸ்லிம்மாகவும் இந்த ஸ்மார்ட்ஃபோன் தயாரிக்கப்படவுள்ளது.
ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ரியல்மி நிறுவனம் 10,000 mAh பேட்டரி திறன், 200 கிராம் எடையுடன் கூடிய புதிய ஸ்மார்ட்ஃபோனை விரைவில் தயாரித்து விற்பனைக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக திறன் கொண்ட பேட்டரியை உடைய ஸ்மார்ட்ஃபோனை நாம் பார்ப்பது இது முதல்முறை இல்லை என்றாலும்கூட, அதிக திறனுடன் எடை குறைவாகவும், ஸ்லிம்மாகவும் தயாரிக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். போனின் வடிவமைப்பு, உறுதித் தன்மை, உழைக்கும் திறன் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு ரியல்மி நிறுவனம் இந்த ஸ்மார்ட்ஃபோனை வடிவமைத்துள்ளது. தற்போதைய நிலையில் வெறும் கான்செப்டாக மட்டும் இருக்கும் இந்த ஸ்மார்ட்ஃபோன் விரைவில் விற்பனைக்கு வரலாம்.
திட்டமிட்டுள்ள வடிவமைப்பின்படி, இந்த ஸ்மார்ட்ஃபோன் 8.5 மில்லிகிராம் தடிமனுடன், 200 கிராம் எடையை கொண்டிருக்கும். இதில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரித் திறனைக் கருத்தில்கொண்டால், இது மிக எடை குறைவானதாகும். ரியல்மி தன்னுடைய புதிய ஆனோட் (Anode) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த பேட்டரியை உருவாக்கி உள்ளது. அதில் 10% சிலிக்கான் பயன்படுத்தப்பட்டிருப்பது இந்த பேட்டரியின் அளவையும், எடையையும் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் பார்ப்பதற்கு 6000 - 7000 mAh திறன் கொண்ட ஸ்மார்ட்ஃபோன் போலவே காணப்படும். ஆனால், இதன் உண்மையான திறன் 10,000mAhஆக இருக்கும்.
மேலும், இதில் 100W திறன் கொண்ட சார்ஜிங் சப்போர்ட் அளிக்கப்பட உள்ளது. பேட்டரியின் திறன் அதிகமாக இருப்பதால் 100W சார்ஜிங் ஸ்பீடு இருந்தாலும், முழுவதுமாக சார்ஜ் பெறுவதற்கு ஒருமணி நேரத்திற்கு மேல் ஆகும். ஒருமுறை சார்ஜ் செய்தால் பேட்டரி திறன் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்று ரியல்மி நிறுவனம் தற்போது வரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு திறன் கொண்ட ஸ்மார்ட்ஃபோனை தங்களுடைய GT சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்களுக்கும் ரியல்மி நிறுவனம் கொண்டு வரவேண்டும் என்பது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.