TikTok Ban Canceled: மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற செயலியாக இயங்கி வந்தது டிக்டாக். பைட்டான்ஸ் (ByteDance) என்ற சீன நிறுவனத்தின் செயலி இதுவாகும். இதில், ஆரம்பத்தில் காமெடி வீடியோக்கள் பதிவிடப்பட்டு வந்தது. ஆனால் நாட்களாக செல்ல செல்ல சிலர் திறமை என்கிற பெயரில் ஆபாசமாக வீடியோக்கள் எடுத்து வெளியிட்டனர். குறிப்பாக, இளம் பெண்களின் கவர்ச்சியான வீடியோக்கள் அதிக அளவில் பதிவிடப்பட, டிக் டாக் ஆபாச தளமாக பார்க்கப்பட்டது. இதனால் சமூகம் சீர்கெடுவதாக கூறி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில், டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
ஏப்ரல் 23ம் தேதி வழக்கை விசாரித்த நீதிமன்றம், டிக்டாக் செயலியை தடை செய்ய உத்தரவிட்டது.
தடையை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அந்நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் மதுரைக் கிளையின் உத்தரவிற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் சார்பில் கூகுள் பிளே மற்றும் ஆப்பிள் செயலிகள் தளத்தில் இருந்து டிக்டாக்கை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்.16ம் தேதி முதல் கூகுள் ப்ளேயில் அந்த செயலி ப்ளாக் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை இன்று(ஏப்.24) ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆபாசமாக வீடியோக்கள் பதிவேற்றம் செய்தால், தானாகவே செயலி அதனை அழித்துவிடும் என டிக் டாக் நிறுவனம் உறுதியளித்தது.
இதைத் தொடர்ந்து சிறுவர்கள், சிறுமிகள், பெண்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் டிக்-டாக் செயலி மீதான தடையை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீக்கியுள்ளது. மேலும், டிக் டாக் நிறுவனம் அளித்துள்ள உறுதிமொழியை மீறினால் நீதிமன்ற அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.