ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோர் மற்றும் ஆண்ட்ராய்டின் பிளே ஸ்டோரில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது டிக்டாக் செயலி. இதனை கொண்டாடும் வகையில், தினசரி தங்கள் பயனாளர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகையாக வழங்க முன்வந்துள்ளது.
சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனம் 2016ல், சீனாவில் Douyin என்ற பெயரில் இந்த செயலியை அறிமுகப்படுத்தியது. 3 முதல் 15 விநாடிகள் காலஅளவிலான இசை வீடியோக்களையும் மற்றும் 3 முதல் 60 விநாடிகள் கால அளவிலான வீடியோவையும் இந்த செயலி மூலம் உருவாக்கலாம், நண்பர்களுக்கும் பகிரலாம். ஆசிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் முன்னணி குறுவீடியோ இணையதளமாக இந்த டிக்டாக் செயலி விளங்கி வருகிறது.
இந்தியாவில், இந்த டிக்டாக் செயலி மூலம், ஆபாச நடன அசைவுகள் கொண்ட வீடியோக்கள் அதிகம் உருவாக்கி பகிரப்படுவதாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த செயலிக்கு உடனடியாக தடை விதித்தனர். இந்தியாவில், ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் ஆண்ட்ராய்டின் பிளே ஸ்டோர் போன்றவைகளில் இருந்து இந்த செயலி நீக்கப்பட்டது.
தடை காரணமாக ஒரு நாளைக்கு ரூ.3.48 கோடி நஷ்டமடைவதாக அந்நிறுவனம் கோரிக்கை விடுத்து, தடையை நீக்கக் கோரியது. இதுபோன்ற வீடியோக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியை அடுத்து, டிக்டாக் செயலிக்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஆப் பிளே ஸ்டோர்களில், அதிக டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகளில் ஏப்ரல் 30ம் தேதி நிலவரப்படி 90வது இடத்தில் இருந்த டிக்டாக், தற்போது மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதற்கு காரணம் இந்த ஒரே ஒரு அறிவிப்புதான். மே 1 முதல் மே 16 வரை தினமும் மூன்று யூசர்களுக்கு டிக்டாக் நிறுவனம் ரு.1 லட்சம் பரிசு என்று அறிவிக்கப்பட்டதே டாப் இடத்துக்கு வரக்காரணம். இழந்த மார்க்கெட்டை, பரிசு அறிவிப்பை வெளியிட்டு மீண்டும் பிடிக்க டிக்டாக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
-குமரன் பாபு