பாதுகாப்பான மெசேஜிங் செயலியான சிக்னல் ஹேக் செய்யப்பட்டு, மீண்டும் மீட்கப்பட்டதாக பரவும் தகவல் போலி என அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் காரணமாக, கிழக்கு ஐரோப்பாவில் இந்த செயலி பயன்பாட்டில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "வதந்திகள் குறைந்த பாதுகாப்பான மாற்றுகளைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இவை பல்வேறு செயலிகளில் பரவி வருகிறதை பார்த்தோம். அதில், சிக்னல் செயலி மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அரசு ஆதாரங்கள் தெரிவிப்பதாக தகவல் இடம்பெற்றுள்ளது. அது பொய்யானது. சிக்னல் எவ்வித தாக்குதலையும் எதிர்கொள்ளவில்லை" என குறிப்பிட்டுள்ளது.
டெலிகிராமுக்கு எதிராக பதிவு
இந்த வதந்தியானது, சிக்னல் நிறுவனர் மோக்ஸி மார்லின்ஸ்பைக் தனது ட்விட்டர் கணக்கில், போட்டி செயலியான டெலிகிராமுக்கு எதிராக பதிவிட்டதை தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
அவர் ட்விட்டர் பக்கத்தில், "அர்பன் உக்ரைனில் டெலிகிராம் மிகவும் பிரபலமான செயலியாகும். மக்கள் அதனை பாதுகாப்பான செயலியாக நம்புகின்றனர். ஆனால், அவை தவறான மார்க்கெட்டிங் மற்றும் பத்திரிகை செய்தியின் விளைவாகும்.
ஆனால், உண்மை நேர்மாறானது ஆகும். டெலிகிராம் என்பது கிளவுட் டேட்டாபேஸ், அதில் அனைவரும் அனுப்பும் மெசேஜ்-வும், ரிசிவ் ஆகும் மெசேஜ்ஜின் ப்ளைன்டெக்ஸ்ட் நகலாகும்.
கடந்த 10 ஆண்டுகளாக அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட ஒவ்வொரு செய்தி, புகைப்படம், வீடியோ, ஆவணம், குழு உறுப்பினர் போன்றவை அனைத்தும் டேட்டாபேஸை அணுகுபவர்களுக்கு கிடைத்திடும்.
தற்போதைய பிரச்சினை என்னவென்றால், பல டெலிகிராம் ஊழியர்களுக்கு ரஷ்யாவில் குடும்பம் உள்ளது. ரஷ்யா செயலியை ஹேக் செய்யாவிட்டாலும், அவர்கள் குடும்பப் பாதுகாப்பை அணுகுவதற்கு பயன்படுத்த முடியும்.
சிக்னல் இயல்பாகவே என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டlது. அதன் பாதுகாப்பு நெறிமுறை அனைவரும் அறிந்ததுதான். அதே நெறிமுறையை வாட்ஸ்அப் பயன்படுத்துகிறது. ஆனால், டெலிகிராம் முழுவதுமாக என்க்ரிப்ட் செய்யப்படவில்லை. டெலிகிராமில் உள்ள ‘சீக்ரட் சாட்’ மட்டுமே என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்படுகின்றன.
டெலிகிராம் பாதுகாப்பு நெறிமுறை குறித்து கேள்விகள் எழுப்பப்படுவது இது முதல் முறை அல்ல. ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்த டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ், செயலியின் பாதுகாப்பை கடந்த காலத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. அவர், "எஃப்.பி.ஐ அமைப்பால் வாட்ஸ்அப்பில் உள்ள தகவலை அணுக முடியும் ஆனால் டெலிகிராம் செயலியில் அப்படி செய்ய முடியாது" என தெரிவித்திருந்தார்.
துரோவ் கூறுகையில், "வாட்ஸ்அப் போன்ற பயன்பாடுகள் மூன்றாம் தரப்பினருக்கு ரியல்டைம் பயனர் தரவை வழங்குகின்றன. என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டது என கூறினாலும், மெசேஜ்களை வெளியிட முடியும்" என குறிப்பிட்டிருந்தார்.
சுவாரஸ்யமாக, கடந்தாண்டு வாட்ஸ்அப் அதன் தனியுரிமைக் கொள்கையில் மாற்றங்களை அறிவித்தபோது, இந்தியாவில் சிக்னல் செயலியின் பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. அதே நேரத்தில், டெலிகிராமின் பயனர்களும் அதிகமானார்கள். இது, வாட்ஸ்அப்பின் தனியுரிமை கொள்கையை தள்ளிவைக்க கட்டாயப்படுத்தியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil