/indian-express-tamil/media/media_files/2025/02/09/7HvxaloJVHsFMsYHorKr.jpg)
ஹேக்கத்தான் 2025
சாலை பாதுகாப்பு தொடர்பான புதுமை கண்டுபிடிப்பு சிந்தனைகளை உருவாக்கும் முன்மாதிரி போட்டியான "உயிர்" சாலை பாதுகாப்பு ஹேக்கத்தான் 2025 மென்பொருள் மற்றும் வன்பொருள் திட்ட உருக்கள் மற்றும் முன்மாதிரிகள் வடிவமைப்பு போட்டிகள் கோவையில் நடைபெற்றது.
ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழக அரசு மற்றும் "உயிர்" அரசு சாரா சாலை பாதுகாப்பு தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் சாலை பாதுகாப்பு தொடர்பான புதுமை கண்டுபிடிப்பு சிந்தனைகளை உருவாக்கும் முன்மாதிரி போட்டியான "உயிர்" சாலை பாதுகாப்பு ஹேக்கத்தான் 2025, மென்பொருள் மற்றும் வன்பொருள் திட்ட உருக்கள் மற்றும் முன்மாதிரிகள் வடிவமைப்பு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
பிப்ரவரி 08 மற்றும் 09 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வின் துவக்க விழா பிப்ரவரி 08 ஆம் தேதி ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், தலைமை விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்து கொண்டார். கௌரவ விருந்தினர்களாக, கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செயற்கை நுண்ணறிவு உந்துதலில் புதுமையான சாலை பாதுகாப்பு கண்டுபிடிப்புகள், சாலை பாதுகாப்பில் ஆளில்லா விமான தொழில்நுட்பம், சமூகத்தால் ஏற்படும் சாலை பாதுகாப்பு தீர்வுகள், விளையாட்டு அடிப்படையிலான கற்றலில் பாதுகாப்பான கல்வி மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆகியவை இப்போட்டியின் முக்கிய அம்சங்களாகும்.
இப்போட்டியில் நாடு முழுவதிலுமிருந்து ஐ.ஐ.டி, என்.ஐ.டி உள்ளிட்ட உயர் தொழில் நுட்பக்கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர் மற்றும் தொழில் நுட்ப நிபுணர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
போட்டியாளர்களின் திட்ட உருக்கள் மற்றும் மென்பொருள் மற்றும் வன்பொருள்களின் முன்மாதிரி வடிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. இவற்றை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சார்ந்த டீன்கள், துறைத்தலைவர்கள், பேராசியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட அனைவரும் பங்காற்றினர்.
மேலும், 'உயிர்' அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், 'உயிர்' அமைப்பின் அறங்காவலரும் இந்நிகழ்வின் திட்ட பொறுப்பாளரும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவரும் நிர்வாக அறங்காவலருமாகிய மலர்விழி, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் ஆதித்யா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.