வோடஃபோன் நிறுவனம், ரூ.198 ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.4 ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்திய சந்தையில், டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன், போன்ற முன்னணி நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், புதிய ரீசார்ஜ் திட்டங்கள், ஆஃபர்கள், கேஸ்பேக் சலுகை போன்ற பல்வேறு புதுமைகளை புகுத்தி ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையே ஏற்படும் போட்டியில், வாடிக்கையாளர்கள் அதிகளவில் பயன் பெறுகின்றனர். ஏர்டெல் மற்றும், ஜியோவைப் பொறுத்தவரையில் இந்த நிலை தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இந்த போட்டியில் தற்போது வோடாஃபோன் நிறுவனமும் இணைந்துள்ளது. இதன்படி, நாள் ஒன்றுக்கு 1.ஜிபி டேட்டா வழங்கி வந்த ரூ. 198 ரீசார்ஜ் திட்டத்தில், இனி 1.4 ஜிபி டேட்டாவை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
28 நாட்கள் செயல்படும் இந்த திட்டத்தில், 3ஜி/4ஜி வேகத்தில் இயங்கக்கூடிய மொத்தம் 39.2 ஜிபி டேட்டாவை வழங்க உள்ளது. இதில் நாள் ஒன்றுக்கு 1.4 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனுடன், அளவில்லாத லோக்கல் மற்றும் ரோமிங் கால்ஸ், தினமும் 100 இலவச குறுங்செய்திகளையும் உபயோகிக்கலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனைப்போலவே, வோடஃபோனின் ரூ.199 ரீசார்ஜ் திட்டத்திலும், ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு, நாள் ஒன்றுக்கு 1.4 ஜிபி டேட்டா, தினமும் 100 இலவச குறுங்செய்திகள், அன்லிமடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் ரோமிங் கால்களை பயன்படுத்திக் கொள்ளலாம். 28 நாட்கள் செயல்படும் இந்த திட்டம், தற்போது செயல்பட்டு வருகிறது.