/indian-express-tamil/media/media_files/2025/10/11/mic-e-mouse-2025-10-11-21-35-11.jpg)
உங்க மவுஸ் ஒட்டு கேட்கிறது உங்களுக்கு தெரியுமா? 'மைக்-இ-மவுஸ்' மோசடி எப்படி நடக்கிறது தெரியுமா?
கம்ப்யூட்டரில் வெறும் கிளிக் செய்யவும், ஸ்க்ரோல் செய்யவும் மட்டுமே மவுஸ் பயன்படுவதாக நீங்க நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், இப்போதிலிருந்து உங்க மவுஸைப் பார்க்கும் பார்வை மாறலாம். கலிபோர்னியா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள ஒரு புதிய உளவு முறை, உங்க மவுஸையே ரகசிய மைக்ரோஃபோனாக மாற்றி, நீங்க பேசுவதைக் கேட்க முடியும் என்று அதிர்ச்சியூட்டியுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் இந்த முறைக்கு "Mic-E-Mouse" என்று பெயரிட்டுள்ளனர். இந்தத் தந்திரத்தின் ரகசியம் என்னவென்றால், கம்ப்யூட்டர் மவுஸில் பயன்படுத்தப்படும் சென்சார்கள் (Sensors) மிக மிக அதிக உணர்திறன் கொண்டவை. நாம் பேசும்போது ஏற்படும் சிறு ஒலி அதிர்வுகளையும் (Acoustic Vibrations) மவுஸின் சென்சாரால் கண்டறிய முடியும். இந்த அதிர்வுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சைபர் தாக்குதல் செய்பவர்கள், மவுஸை தற்காலிக மைக்ரோஃபோனாகச் செயல்பட வைத்து, யாரும் அறியாமல் உங்க உரையாடல்களைக் கேட்க முடியும்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
மவுஸ் போன்ற எளிமையான சாதனங்களை வைரஸ் ஸ்கேன் (Scan) செய்வது குறைவு என்பதால், தாக்குதல் நடத்துபவர்கள் சிஸ்டத்திற்குள் நுழைந்து தகவல்களை எளிதாகத் திருட இது ஒரு புதிய வழியைத் திறக்கிறது. ஆராய்ச்சிக் குழு, தாங்கள் சேகரித்த அதிர்வுத் தரவுகளை, இரைச்சலை நீக்குவதற்காகச் சிறப்பு வைனர் ஃபில்டர் மூலம் அனுப்பி, பின்னர் வார்த்தைகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு அமைப்புக்கு (AI) வழங்கியது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், பேசப்படும் வார்த்தைகளைப் புரிந்துகொள்வது கடினமாக இருந்தாலும், எண்களை ஏ.ஐ-யால் மிக எளிதாகப் பிரித்தெடுக்க முடிந்தது. இதன் பொருள், தாக்குதல் நடத்துபவர்கள் நீங்கள் பேசும் போது வெளிவரும் கிரெடிட் கார்டு எண்கள், OTP அல்லது கடவுச் சொற்களைக் கூடத் திருட வாய்ப்புள்ளது. இந்த முறை பயங்கரமாக இருந்தாலும், கவலை வேண்டாம், இதை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன:
மவுஸ் கட்டாயம் சமமான, சுத்தமான மேசைப் பரப்பில் (Flat Surface) இருக்க வேண்டும். மவுஸ் மேட் அல்லது மேசை விரிப்பில் இருந்தால், அதிர்வுகளைப் பிடிக்கும் திறன் பெருமளவு குறைந்து, உளவு பார்ப்பது தோல்வியடையும். சுற்றுப்புற இரைச்சல் (Environmental Noise) அதிகமாக இருக்கும் இடங்களில் உரையாடல்களைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமாகிறது.
ஆராய்ச்சியாளர்கள் இது மிகவும் கடினமான தாக்குதல் என்று தெரிவித்தாலும், பாதுகாப்பு நிபுணர்கள் இதுவரை கண்டுகொள்ளாத எளிய சாதனங்களான மவுஸ்கூட உளவு கருவியாக மாறலாம் என்பதை இந்த ஆய்வு முதன்முறையாக உலகிற்கு உணர்த்தியுள்ளது. எனவே, இனி உங்க மவுஸைப் பயன்படுத்துகையில் ஒரு கண் இருக்கட்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.