சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். பட்டியலின பொறியியல் மாணவரான இவர், வேறு சமூகத்தை சேர்ந்த தன்னுடன் பயின்ற சுவாதி என்ற பெண்ணை காதலித்தார்.
இருவரும் 2015ஆம் ஆண்டு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சந்தித்துள்ளனர். இந்த நிலையில், கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை. அவர் நாமக்கல் கிழக்கு தொட்டிபாலம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது இது சாதி ஆணவ படுகொலை என்பது தெரியவந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் யுவராஜ் அவரது கார் ஓட்டுநர் அருணன் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் தவிர 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மொத்தம் 10 பேர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். 5 பேர் விடுவிக்கப்பட்டனர்.
கீழமை நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்பட தண்டனை பெற்ற 10 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மேல்முறையீடு தாக்கல் செய்தனர்.
அப்போது, சுவாதியை மீண்டும் விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினார். அப்போது காணொலியில் இருப்பது தான் இல்லை என்றும் ஆடியோவில் இருப்பது தன்னுடைய குரல் இல்லை என்றும் சுவாதி பிறழ்சாட்சியம் அளித்தார். இவர், 2018ஆம் ஆண்டு இதேபோன்று பிறழ்சாட்சியம் அளித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், “நீங்கள் பொய் சொன்னால் சிறை செல்ல நேரிடும். எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கிறீர்களா?
அன்று பதிலளித்துவிட்டு இன்று தெரியாது என்கிறீர்கள். நீதிமன்றம் என்ன விளையாட்டு மைதானமா? எனக் கேள்வியெழுப்பினார்கள்.
இதையடுத்து, “உண்மையை சொல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு உங்களுக்கு வழங்குகின்றோம். உங்களின் மனசாட்சியை உங்களை சுடும். இது தவிர உங்களுக்கு ஏதாவது அழுத்தம் இருந்தால் அதையும் கூறலாம்” என்றனர்.
தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை நவ.30ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் சுவாதி குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil