மஹிந்திரா குழும நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டுவிட் செய்துள்ள ஒரு உணவகத்தின் பியூர் வெஜிடேரியன் உணவுப் பட்டியல் பலகை புகைப்படம் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கூட்டாஞ் சோறு என்ற ஒரு உணவகத்தின் உணவுப் பட்டியல் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், ‘தூய சைவ உணவு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ‘வெஜ் - ஃபிஷ் பிரை' ,'வெஜ் மட்டன் தோசை', ‘வெஜ் சிக்கன் பிரை' என்ற உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த உணவுப் பட்டியல் குறித்து தனது பதிவில் ஆனந்த் மஹிந்திரா குறிப்பிடுகையில், “இன்கிரிடபில் இந்தியா எப்படி இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. ஒரு பொருளின் மீதான நம்பிக்கை என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறிந்திருக்கிறோம். சைவத்துக்கும் அசைவத்துக்கும் என்ன வித்தியாசம்? அது எல்லாம் நம்புவர்கள் மனதில் இருக்கிறது…” புன்னகையுடன் தெரிவித்துள்ளார்.
ஆனந்த் மஹிந்திராவின் இந்த உணவுப் பட்டியல் டுவிட்டர், சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகியுள்ளது.
ஒரு டுவிட்டர் பயனர், “எனது ஜெயின் வாடிக்கையாளர்கள் உணவில் வெங்காயம், பூண்டு மற்றும் உருளைக்கிழங்கு மட்டும் உணவில் இருக்கக் கூடாது. மற்றபடி கோழி, முட்டை சாப்பிடுவதை பெரிதாக கருதுவதில்லை” என்று கூறியுள்ளார்.
மற்றொரு டுவிட்டர் பயனர் “மலேசியாவில் இது மிகவும் பொதுவானது. அசல் அசைவ உணவுகள் போன்று தோற்றமளிக்கும் மற்றும் சுவைக்கும் டோஃபு உணவுகள் வழங்கப்படுவதுண்டு” என்று தெரிவித்துள்ளார்.
பொதுவாக, மரக்கறி உணவுகளை சவை உணவு என்றும் மீன், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி உள்ளிட்ட இறைச்சி வகைகள் அசைவ உணவு வகைகள் என்பதுதான் பழக்கம். ஆனால், இந்த உணவகம், சைவ மீன் வறுவல், சைவ மட்டன் தோசை, சைவ சிக்கன் ரைஸ் என்று பலகை வைத்திருப்பது கவனத்தைப் பெற்று விவாதமாகியுள்ளது.