கோயம்புத்தூரில் 1 ரூபாய்க்கு ஒரு இட்லி விற்கும் மூதாட்டி கமலாத்தாள் குறித்த செய்தியை பகிர்ந்து தன் வியப்பை வெளிப்படுத்தியுள்ளதோடு, சிலிண்டர் வழங்கி உதவியும் உள்ளார் ஆனந்த் மகேந்திரா.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கமலாத்தாள் என்ற மூதாட்டி ஒரு இட்லியை ஒரு ரூபாய்க்கு விற்றுவருகிறார். மளிகை பொருட்களின் விலை கடுமையாக ஏறிவிட்ட நிலையிலும் ஒரு இட்லியை ஒரு ரூபாய்க்கே தற்போது வரை விற்று வருகிறார் கமலாத்தாள். இட்லிக்கு தொட்டுக்கொள்ள சட்னி மற்றும் சாம்பார் ஆகியவற்றையும் வழங்குகிறார். இட்லி சுடுவது, சட்னி அரைப்பது, சாம்பார் செய்வது என்று அத்தனை வேலைகளையும் தனி ஆளாக செய்துவருகிறார். மேலும், சமைப்பதற்கென்று தற்போது வரை விறகு அடுப்பையே பயன்படுத்தி வருகிறார்.
சமீபத்தில், மூதாட்டி கமலாத்தாள் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பது குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதன் பின்னர், அருகிலுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் கமலாத்தாள் இட்லி விற்கும் கடைக்கு படையெடுக்கத் தொடங்கியதையடுத்து, அவரது கடை பிரபலமானது.
ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பது குறித்த காணொளி ஒன்றை தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த, மகேந்திரா குழுமத்தின் சேர்மன் ஆனந்த் மகேந்திரா, கமலாத்தாள் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்வது குறித்து "நம் உழைப்பின் ஒட்டுமொத்தத்தையும் சேர்த்து கணக்கிட்டால் கூட கமலாத்தாள் போன்றவர்களின் உழைப்பின் கால்தூசிக்கு கூட ஒப்பாகாது" என்று வியந்திருந்தார்.
மேலும், “இவர் இன்னும் விறகு அடுப்பையே பயன்படுத்துவதாகத் தெரிகிறது. இவரைப்பற்றி யாருக்கேனும் தெரிந்தால், எல்பிஜி கேஸ் அடுப்பு கொடுத்து அவரது தொழிலில் முதலீடு செய்ய தயாராக இருக்கிறேன்” என்றும் கூறியிருந்தார். இதனையடுத்து, மூதாட்டி கமலாத்தாளுக்கு உதவ பலர் முன்வந்துள்ளனர்.
ஆனந்த் மஹிந்திராவின் இந்த அறிவிப்பை பலரும் பாராட்டிய அதே சமயத்தில், ஒரு முறை இலவசமாக சிலிண்டர் கொடுத்தால், தொடர்ந்து அவரால் எப்படி அதனை வாங்க இயலும்? என கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு ட்விட்டரிலேயே பதில் அளித்திருந்த ஆனந்த் மஹிந்திரா, "அவருக்கு தொடர்ந்து சிலிண்டர் வழங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் குழு தொடர்ந்து அதனை உறுதி செய்வார்கள்" என்று குறிப்பிட்டார்.
கமலாத்தாள் குறித்த செய்தி கட்டுதீயாய் சமூக தளங்களில் பரவ, இதனை கண்ட உள்ளூர் எல்பிஜி விநியோகஸ்தர்கள், மூதாட்டிக்கு சிலிண்டர் மற்றும் அடுப்பை வழங்கியுள்ளனர். இதனை மத்திய பெட்ரோலியத்துறை மற்றும் இயற்கை வாயுக்கள் அமைச்சர் தர்மேந்திர பிரதான் வரவேற்றுள்ளார்.
இந்நிலையில், கோவை பாரத் கேஸுக்கு நன்றி தெரிவித்த ஆனந்த் மஹிந்திரா, "நான் தொடர்ந்து கமலாத்தாளுக்கு சிலிண்டர் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.