/indian-express-tamil/media/media_files/2025/10/19/hitler-2-2025-10-19-17-17-36.jpg)
உளவியலாளர் ஜூலியா ஷா அடால்ஃப் ஹிட்லரை ஒரு கேள்விக்கு ஆய்வாக விவாதித்தார்.
“தீமை பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறது” என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அறிவியல் இதற்கு மாறாகச் சொன்னால் என்ன செய்வது? மக்கள் தீமை எனும் இருளுடன் பிறக்கிறார்களா அல்லது வாழ்க்கையின் அனுபவங்களால் வடிவமைக்கப்படுகிறார்களா என்ற நீண்டகால விவாதம் உளவியலாளர்கள், தத்துவவாதிகள் மற்றும் சாதாரண பார்வையாளர்கள் மத்தியில் தொடர்ந்து ஆர்வம் ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில், ஒரு ஜெர்மன் - கனடா குற்றவியல் உளவியலாளர் ஜூலியா ஷா (Julia Shaw), சைக்கோபாத்கள் (மனநோயாளிகள்) பிறவியிலேயே தீயவர்களா என்பது குறித்த தனது பார்வையைப் பகிர்ந்து கொண்டார்.
பிரபலமான லெக்ஸ் ஃபிரைட்மேன் பாட்காஸ்டில் ஜூலியா ஷா தோன்றினார். அதில் ஃபிரைட்மேன் குற்றம் மற்றும் மனித குரூரத்தன்மைக்குப் பின்னால் உள்ள உளவியலை ஆராய்ந்தார். ஜூலியா ஷாவின் ‘தீமையை உருவாக்குதல்’ "Making Evil) என்ற புத்தகத்தில் உள்ள ஒரு கேள்வியுடன் அவர் விவாதத்தைத் தொடங்கினார்: "நீங்கள் சிறுவன் ஹிட்லரைக் கொல்வீர்களா?" இது ஒரு "முடிவெடுக்கும் கேள்வி" என்று கூறிய ஃபிரைட்மேன், அதற்கான விளக்கத்தை ஜூலியா ஷாவிடம் கேட்டார்.
ஜூலியா ஷா விளக்கமளித்ததாவது: “மக்கள் தீவிரமான தீங்கு விளைவிக்கும் இயல்புடன் பிறக்கிறார்களா அல்லது அந்தப் பண்புகள் சமூகத்தால் வடிவமைக்கப்படுகிறதா என்பதைப் பற்றி மக்கள் பேச வைப்பதற்காகவே இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது.”
அவர் அடால்ஃப் ஹிட்லரை ஒரு உதாரண ஆய்வாகப் பற்றி பேசினார். “அவரது வாழ்க்கையை ஆய்வு செய்த உளவியலாளர்கள் பெரும்பாலும், அவர் பைத்தியமா அல்லது மோசமானவரா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். அவர் உண்மையில் பிறரை துன்புறுத்தி இன்பம் காணுதல் (sadism) மற்றும் குறைந்த இரக்கம் (low empathy) போன்ற பண்புகளைக் காட்டினார். ஆனால் அவர் பிறவியிலேயே அப்படிப் பிறந்ததற்கான சான்றுகள் மிகக் குறைவு” என்று ஜூல்யா ஷா கூறினார். “அவரது ஆரம்பகால வாழ்க்கையில், அந்த முக்கியமான பண்புகள் பல தெளிவாகத் தெரியவில்லை. எனவே, நான் காலத்தில் பின்னோக்கிச் சென்று குழந்தை ஹிட்லரைக் கொல்வேனா? எனது பதில் இல்லை. மக்கள் பிறவியிலேயே தீயவர்களாகப் பிறக்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை.” என்று குறினார்.
இயல்புக்கு எதிராக வளர்ப்பு (nature versus nurture) என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது, மக்களை விவரிக்க "தீமை" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஜூலியா ஷா எச்சரித்தார். ஒருவரை "தீயவர்" என்று முத்திரைக் குத்துவது அர்த்தமுள்ள உரையாடலை முடிவுக்குக் கொண்டுவருகிறது என்று அவர் விளக்கினார். “ஒருவரைத் தீயவர் என்று அழைக்கும்போது, அவர்களை நம்மிடமிருந்து பிரித்து விடுகிறோம். அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள் என்று புரிந்துகொள்ள முயல்வதை நிறுத்திவிட்டு, நம்மால் அதை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது என்று ஊகித்துக்கொள்கிறோம்.”
ஜூலியா ஷாவின் கருத்துப்படி, அனைவருக்கும் தீங்கு விளைவிக்கும் ஆற்றல் உள்ளது என்பதை அங்கீகரிப்பதே மனித நடத்தையைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோலாகும். “மோசமான செயல்களைச் செய்யும் திறன் நம் அனைவருக்கும் உள்ளது” என்று அவர் கூறினார். "உண்மையான கேள்வி என்னவென்றால், மக்கள் ஏன் கெட்ட காரியங்களைச் செய்கிறார்கள் என்பதல்ல, ஆனால் நம்மில் பெரும்பாலானோர் ஏன் அதைச் செய்ய வேண்டாம் என்று தேர்வு செய்கிறோம் என்பதுதான்.”
இறுதியாக, பயங்கரமான குற்றங்களைச் செய்பவர்களிடம் கூட இரக்கம் காட்டுவது அவற்றைத் தடுப்பதற்கு அவசியம் என்று ஜூலியா ஷா வலியுறுத்தினார். மக்களை மீட்க முடியாத தீயவர்கள் என்று முத்திரைக் குத்துவதற்குப் பதிலாக, அத்தகைய நடத்தைக்கு இட்டுச்செல்லும் உளவியல் மற்றும் சமூக காரணிகளைப் புரிந்துகொள்வதில் சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வாதிட்டார். ஏனெனில், புரிந்துகொள்வதன் மூலம் மட்டுமே அதைத் தடுக்க முடியும் என்று ஜூலியா ஷா முடித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.