சென்னை குன்றத்தூரில் அரசு பேருந்தில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை தாக்கிய பாஜக பிரமுகரும், துணை நடிகையுமான ரஞ்சனா நாச்சியாரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை போரூரிலிருந்து குன்றத்தூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் பயணம் செய்த மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிய படியும், பேருந்தின் கூரை மீது ஏறி நின்றபடியும் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.
இதனை தனது செல்போனில் வீடியோ எடுத்த பெண், பேருந்தை வழிமறித்து, தன்னை போலீஸ் என்று கூறிக் கொண்டு படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை திட்டி அடித்து கீழே இறக்கி விட்டார், பிறகு நடத்துநர் மற்றும் ஓட்டுநரை அவதூறாக பேசியதாக தெரிகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த நிலையில் பேருந்து ஓட்டுநர் சரவணன் இது தொடர்பாக மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பெண் யார் என மாங்காடு போலிசார் விசாரணை மேற்கொண்டபோது, அவர் பாஜக நிர்வாகியும் சின்னத்திரை நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து இன்று (சனிக்கிழமை) காலை போலீஸார் ரஞ்சனாவை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். மாணவர்களைத் தாக்கியது, அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரஞ்சனா நாச்சியார் துப்பறிவாளன், இரும்புத்திரை, அண்ணாத்த, டைரி, நட்பே துணை என பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனநர் பாலாவின் உடன்பிறந்த அண்ணன் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“