New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/11/S30MuxoWdz3Cs3EGpCtk.jpg)
வெறும் பச்சை மிளகாயை வைத்து கோடிக் கணக்கில் சம்பாதித்த 3 நண்பர்கள்!
வெறும் பச்சை மிளகாயை வைத்து 3 நண்பர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆரம்பித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள் என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆனால், அதுதான் உண்மை. இதன் முழு விபரம் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
வெறும் பச்சை மிளகாயை வைத்து கோடிக் கணக்கில் சம்பாதித்த 3 நண்பர்கள்!
மும்பையில் உள்ள 3 நண்பர்கள் சதீஷ், அர்ஜூன் மற்றும் மிகைல் ஆகிய மூவரும் பச்சை மிளகாயை மூல ஆதாயமாக கொண்டு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கி, இன்று வெற்றியுடன் நடத்தி வருகிறார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு, “நாகின்” என்ற நிறுவனத்தை தொடங்கினார்கள். இதற்கு முன்பு, இவர்கள் சின்ன சின்ன சந்திப்புகளில் தங்களுடைய ஐடியாக்களை வெளிப்படுத்தினார்கள். மார்க்கெட்டிங் துறையில் அனுபவம் கொண்ட சதீஷ், அர்ஜூன், உணவுத்துறையில் அனுபவம் கொண்ட மிகைல் ஆகிய மூவரும் இணைந்ததையடுத்து இந்த வெற்றி சாத்தியமானது.
இந்தியாவில் உணவு என்பது ஒரு கலாச்சாரமாக மதிக்கப்படுகிறது. அதிலும் காரமான உணவை பலரும் விரும்புகிறார்கள். இந்நிலையில், காரத்தை மிகவும் இயற்கையானதாகவும், வித்தியாசமான சுவையுடன் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அந்த ஐடியாவில் இருந்துதான் “நாகின்” என்ற நிறுவனம் தோன்றியது. இவர்கள் தேர்ந்தெடுத்த முக்கிய காய்கறி பச்சை மிளகாய். இதிலிருந்தே சாஸ் தயாரிக்க வேண்டும் என்றும், அந்த சில்லி சாஸ் அனைத்து உணவுகளுக்கும் ஏற்ற வகையில் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.
பச்சை மிளகாயிலிருந்து “Original”, “Kantha Bomb”, “Smoky Bhoot” மற்றும் “The 65” போன்ற சாஸ்கள் தயாரிக்கப்பட்டன. இவை சைவ, அசைவ உணவுகளுக்கு ஏற்றதாகவும், பழைய சோறு முதல் பிரியாணி வரை அனைத்துக்கும் பயன்படுத்தக்கூடியதாகவும் இருந்தன. 10 வினாடிகளில் இந்த சாஸ் உணவில் கூடுதல் சுவை சேர்க்கும் என்றும் அவர்கள் உறுதி அளித்தனர்.
ஆரம்பத்தில், நாகின் பிராண்டை மார்க்கெட்டிங் செய்வதில் சில சிரமங்கள் ஏற்பட்டன. இருந்தாலும், டிஜிட்டல் மார்க்கெட்டிங், விளம்பரங்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக நிறுவனம் வளர்ந்தது. ஆரம்பத்தில், மக்கள் இதை பரிசோதனையாக சோதித்து பார்த்தனர். சுவை நன்றாக இருப்பதை உணர்ந்ததும், தொடர்ந்து வாங்க தொடங்கினர். இந்நிறுவனத்தின் மிகப்பெரிய வளர்ச்சிக்கு காரணம் செயற்கையாக எந்த பொருளும் சேர்க்கப்படாமல், தரமான பச்சை மிளகாய் மட்டுமே சாஸ்களுக்கு பயன்படுத்தப்படுவது. இதுதான் வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பச்சை மிளகாய் உற்பத்தி செய்யும் விவசாயிகளுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்து, அவர்களுக்கு நல்ல விலை கொடுத்து மிளகாய் வாங்கினர். அதன் பிறகு, மிளகாய்கள் சாஸாக மாற்றப்பட்டன. இந்நிறுவனத்தின் வளர்ச்சி காரணமாக, இவர்களுக்கு முதலீடு செய்ய பல நிறுவனங்கள் முன்வந்தன. கிட்டத்தட்ட 1 மில்லியன் டாலருக்கு மேல் இந்நிறுவனத்திற்கு முதலீடு கிடைத்தது என்பதும், அபிஷேக் பச்சன் உட்பட பல பாலிவுட் பிரபலங்களும் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் சில்லறை கடைகளில் விற்பனை தொடங்கிய நிலையில், பின்னர் மொத்த விற்பனையாக மாறியது. தற்போது, 7 நாடுகளுக்கு இவர்கள் தயாரிக்கும் சில்லி சாஸ் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2025 ஜூன் மாதத்தில், நாகின் நிறுவனம் ₹17.5 கோடி டர்ன் ஓவரை பெற்றது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாதாரணமாக சில்லி சாஸ் என்றால், அது முழுக்க முழுக்க செயற்கை பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்டதாக இருக்கும். ஆனால் இந்த நண்பர்களின் “நாகின் சாஸ்”, முழுக்க முழுக்க ஒரிஜினல் பச்சை மிளகாயிலிருந்து மட்டுமே தயாரிக்கப்பட்டதால், ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு உணவகத்திலும் இந்த தயாரிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.