கோவையில் கவனக்குறைவாக புல்லட் வாகனத்தை ஓட்டி சென்ற இளைஞர், மூன்று வயது குழந்தை மேல் மோதி ஏறி இறங்கிய பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கண்ணப்பன் நகரில் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் சத்திய நாராயணன். இவர் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கண்ணப்ப நகர் அருகே உள்ள முருகன் நகர் உள்ள ஒரு வீதி ஒன்றில் தனது புல்லட் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று உள்ளார்.
அப்போது அந்த வீதியில் விளையாடிக் கொண்டு இருந்த 3 வயது குழந்தை மீது பயங்கரமாக மோதியுள்ளது. இருசக்கர வாகனம் வருவது தெரியாமல் விளையாடி கொண்டிருந்த குழந்தை மீது கவனக்குறைவாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து அந்த 3 வயது குழந்தை மீது மோதி ஏறி இறங்கி சென்றது.
இதன் பின்னர் அந்த குழந்தை அந்த இடத்திலேயே எழ முடியாமல் துடி துடித்துள்ளார். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். இந்த சம்பவத்தின் நெஞ்சை பதற வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து காந்திபுரம் போக்குவரத்து பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.