Coimbatore News in Tamil | “சின்னத்தம்பி” கும்கி யானையின் உதவியுடன் வாயில் காயம்பட்ட யானைக்கு மருத்துவர்கள் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக டாப்சிலிப் வரகளியாறு முகாம் கொண்டு செல்லப்பட்டது.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளியங்காடு, தோலம்பாளையம் ஊராட்சிகளில் உள்ள பல்வேறு பகுதிகள் அடர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இதனால் உணவு மற்றும் தண்ணீரை தேடி யானை, மான், காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக வெள்ளியங்காடு ஊராட்சிக்குட்பட்ட ஆதிமாதையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் ஒற்றை காட்டு யானை விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது. மேலும், அந்த யானையை வனத்துறையினர் அடர் வனப்பகுதியில் விரட்டியும் மீண்டும் விளை நிலங்களிலேயே முகாமிட்டு வந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
இதன் காரணமாக அச்சமடைந்த விவசாயிகள் காரமடை – தோலம்பாளையம் செல்லும் சாலையில் தாயனூர் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் காட்டு யானையை மீட்டு உரிய சிகிச்சையளித்து அடர் வனப்பகுதிக்குள் விட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வாயில் காயம்பட்ட யானையை மீட்டு சிகிச்சை அளிக்கும் வகையில் பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் உள்ள கோழிக்கமுத்தி முகாமில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டது. மேலும்,மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையில் கோவை வன கால்நடை மருத்துவர் சுகுமார், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் சதாசிவம் உள்ளிட்டோர் அடங்கிய இரு மருத்துவ குழுவினரும் வரவழைக்கப்பட்டனர்.மேலும்,காரமடை வனச்சரகர் திவ்யா தலைமையிலான வனத்துறையினர் தொடர்ந்து காயம்பட்ட யானையை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை கோவை வன கால்நடை மருத்துவர் சுகுமார்,சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் சதாசிவம் உள்ளிட்டோர் சின்னத்தம்பி என்ற கும்கி யானையின் உதவியுடன் வாயில் காயம்பட்ட நிலையில் சுற்றித்திரிந்த ஒற்றைப்பெண் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
மேலும் அதற்கு ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள்,குளுக்கோஸ் நரம்பு சத்து டானிக் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. தொடர்ந்து கண்காணித்த மருத்துவர்கள் இரண்டாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி அந்த யானையின் மலக்குடல் வழியாக 35 லிட்டர் தண்ணீர்,10 லிட்டர் குளுக்கோஸ் உள்ளிட்டவற்றையும் காயம்பட்ட யானைக்கு செலுத்தினர்.
இதனையடுத்து யானையின் உடல் நிலையில் லேசான முன்னேற்றம் இருந்ததை அடுத்து வனத்துறை உயரதிகாரிகளின் உத்தரவின்படி யானை மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் உள்ள வரகளியாறு யானைகள் பராமரிப்பு முகாமிற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக யானைக்கு மீண்டும் மயக்க ஊசி செலுத்தி அதனை பத்திரமாக சாய்வு தளத்தில் கும்கி யானை உதவியுடன் லாரியில் ஏற்றிய வனத்துறையினர் கடவுளை வணங்கி வாகன பயணத்தை துவக்கினர்.
#Video || 'ஊசி குத்துனா ஒரே உதை தான்': நூலிழையில் உயிர் தப்பிய மருத்துவர் – வீடியோhttps://t.co/gkgoZMHWlc | #Coimbatore | #Elephant pic.twitter.com/Hirx2jpC9K
— Indian Express Tamil (@IeTamil) March 18, 2023
காட்டு யானை மற்றும் கும்கி யானையைக் காண அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil