கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஒற்றை காட்டு யானை உலா வந்த நிலையில் பூஜையில் இயக்கப்படும் மங்கள வாத்தியம் இயக்கி யானை விரட்டப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வறட்சியின் காரணமாக உணவு தேடி காட்டு யானைகள் அடிவாரத்தில் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
பருவ மழைகள் பெய்து மலைகளில் வறட்சி நிலை மாறிய பிறகும் வனப் பகுதிக்குள் செல்லாமல், தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் முகாமிட்டுக் கொண்டு உணவு தேடி சுற்று வட்டார பகுதிகளில் வீடுகள், கடைகள் மற்றும் விளைநிலங்கள் சேதப்படுத்தி வருகிறது.
மேலும் அப்பகுதியில் செல்லும் நபர்களையும், அதனை தடுக்கச் செல்லும் விவசாயிகளையும் தாக்கி உயிர் சேதத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கோயிலில் சாமி தரிசனம் செய்து கொண்டு இருந்த போது திடீரென அங்கு வந்த ஒற்றை காட்டு யானையை கண்டு பக்தர்கள் அலறினர். உடனடியாக அங்கு பூஜைக்கு இயக்கப்படும் மங்கள வாத்தியம் முழங்கச் செய்து யானையை விரட்டினர்.
மேலும் அங்கு இருந்து வெளியேறிய காட்டு யானை அருகில் இருந்த பிரசாத கடைக்கு சென்று கடையில் பக்தர்களுக்கு வைத்து இருந்த பிரசாதங்களை தின்று சூறையாடியது.
மீண்டும், மீண்டும் அங்கு வரும் ஒற்றை காட்டு யானை அங்கு உள்ள கடைகளை சூறையாடிச் செல்வது வழக்கமாகக் கொண்டு உள்ளது. எனவே பக்தர்கள் பாதுகாப்புக் கருதி வனத் துறையினர் அங்கு முகாம் அலுவலகம் அமைத்து அங்கு வரும் யானைகளை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த செல்போன் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“