க.சண்முகவடிவேல்
காட்டுப்பகுதியில் இருந்து சாலையை நோக்கி இறங்கி வரும் ஒற்றை யானை முன்பு ஒரு நபர் அலட்சியமாக நடந்து செல்கிறார். யானையை பார்த்ததும் அச்சப்படாத அந்த நபர் யானையை நோக்கி கைக்கூப்பி கும்பிடுவது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலர் சம்பந்தப்பட்ட நபரை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில் அந்த நபர் தற்போது வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்த விபரம் வருமாறு:-
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனச்சரக பகுதி, யானைகளின் வாழ்விடமாக உள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட யாரும் வாகனங்களை நிறுத்தவும், வாகனங்களில் இருந்து இறங்கவும் கூடாது என வனத்துறை சார்பில் ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், ஒகேனக்கல் அருகே சில நாட்களாக ஒற்றை ஆண் யானை ஒன்று சாலையோரம் நடமாடி வருகிறது. இந்த யானையை அவ்வழியே வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்த்தபடி செல்கின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் புதன்கிழமை ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த ஒரு குழுவில் இடம் பெற்றிருந்தவர் ஒற்றை யானையை பார்த்ததும் வாகனத்தை விட்டு இறங்கியுள்ளார். பின்னர் யானைக்கு வெகு அருகில் நடந்து சென்று வணங்கியுள்ளார். அதன்பிறகு, யானைக்கு முதுகு காட்டியபடி நின்று கேமராவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இவரது இந்த செய்கைகளின்போது அந்த ஒற்றை யானை மண்ணை காலால் உதைத்து சிதற விட்டும், செடிகளை ஆக்ரோஷமாக வளைத்து மிதித்தும் பிளிறுகிறது. சுமார் 1 நிமிடம் வரை அவர் இவ்வாறு யானை அருகே நின்று சேட்டைகளை செய்துவிட்டு திரும்பிச் செல்கிறார்.
இந்த காட்சிகளை அவருடன் வந்தவர்கள் வீடியோ பதிவாக்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியபோது, வீடியோவில் உள்ள நபர் தருமபுரி மாவட்டம் பென்னாகாரத்தை சேர்ந்த முருகேசன் என்பது தெரிய வந்தது. இதனையெடுத்து யானையை தொந்தரவு செய்ததற்காக முருகேசன் என்ற மீசை முருகேசனை வனத்துறையினர் கைது செய்ததுடன் அவருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
— Indian Express Tamil (@IeTamil) May 12, 2023
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள சுற்றுசூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ, யானையிடம் குறும்பு செய்த இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது போன்ற செயல்களில் ஈடுபட விரும்புவோருக்கு இது எச்சரிக்கையாக அமையும்” என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil