தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆழியார், வால்பாறை, டாப்ஸ்லிப்,கவியருவி பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்கள் உள்ளன.இங்கு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
தற்போது பள்ளி விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் ஆழியார், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். இதனிடையே ஆழியார் வால்பாறை சாலையில் கடந்த சில நாட்களாக சில்லி கொம்பன் என்ற ஒற்றைக் காட்டு யானை உலா வருகிறது.
தற்போது ஆனைமலை அடுத்த ஆழியார் சின்னார்பதி அருகே உலா வரும் காட்டு யானையால் சுற்றுலாப் பயணிகள் கடும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவ்வப்போது பகல் நேரங்களில் சில்லி கொம்பன் யானை உலா வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
வனத்துறையினர் ஒற்றை யானையை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் யானை பொதுமக்கள் பயணிக்கும் பிரதான சாலையில் உலா வருவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி மற்றும் கோவைக்கு மருத்துவ அவசர தேவைகள்,
அரசு அலுவலகங்கள், வணிகம்பள்ளி - கல்லூரி வேலைக்கு செல்பவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
வனத்துறையினர் ஒற்றைக் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“