வங்கி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடி, காங்கிரஸ் தலைவர்களுக்கு கமிஷன் கொடுத்ததாகவும், அவர்களே அவரை நாட்டை விட்டு வெளியேற கூறியதாகவும் லண்டன் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார் எனக் குறிப்பிட்ட தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தகவலின் உண்மை தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணைய பக்கம் சார்பில் ஆய்வு செய்துள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரியான நிரவ் மோடி, பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ.13,578 கோடி கடன் வாங்கி விட்டு, அதனை திருப்பி செலுத்துவதற்கு பதிலாக வெளிநாட்டுக்கு தப்பியோடினார். 2018-ம் ஆண்டு அவர் நாட்டை விட்டு அவர் வெளியேறிய நிலையில், அதன்பின்பே, அவருக்கு எதிரான மோசடி குற்றச்சாட்டுகள் வெளியுலகிற்கு தெரிய வந்தன.
அதே ஆண்டில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நிரவ் மோடி, மெகுல் சோக்சி மற்றும் பலருக்கு எதிராக அமலாக்க துறை வழக்கு பதிந்தது. இதுபற்றிய விசாரணையின் ஒரு பகுதியாக, பல்வேறு இடங்களில் நடந்த சோதனைகளில் இருந்து வைரம், தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
நிரவ் மோடியை நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அமலாக்க துறை அதிகாரிகள் கேட்டு கொண்டதற்கேற்ப, அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதன் பின்னர், லண்டனில் வைத்து 2019-ம் ஆண்டில் இங்கிலாந்து அதிகாரிகள் அவரை கைது செய்தனர். தற்போது அவர் லண்டன் கிரீன்விச்சில் உள்ள தேம்சைட் தனியார் சிறையில் உள்ளார்.
இந்நிலையில், “நானாக சுயமாக இந்தியாவை விட்டு தப்பித்து ஓட வில்லை. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் காங்கிரஸ் தலைவர்கள் என்னை நாட்டை விட்டு ஓடிப்போக வற்புறுத்தினார்கள். வங்கியில் வாங்கிய கடன் முழுவதையும் நானாக எடுத்துக் கொள்ளவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் கமிஷனாக 456 கோடி எடுத்துக் கொண்டார்கள். அந்த 13,000 கோடியிலும் எனக்கு கிடைத்தது 32% மட்டுமே. மீதி காங்கிரஸ் தலைவர்கள் எடுத்து கொண்டார்கள்” என்று லண்டன் நீதிமன்றத்தில் நீரவ் மோடி வாக்குமூலம் அளித்ததாத குறிப்பிட்ட தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை சரிபார்ப்பு
இந்நிலையில், இந்த தகவலின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ்மீட்டர் இணைய பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் தகவலின் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்துள்ளனர். நிரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் இவ்வாறான வாக்குமூலம் அளித்ததாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. அவர் செய்த மோசடி பணத்தில் காங்கிரஸ் தலைவர்களுக்கு கமிஷன் கொடுத்திருந்தால் அது மிகப்பெரும் செய்தியாக வெளியாகி இருக்கும். ஆனால், எந்த ஊடகமும் அவ்வாறான செய்தியை வெளியிடவில்லை.
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை தொடர்பான செய்தியை டைம்ஸ் ஆப் இந்தியா கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி வெளியிட்டிருந்தது. அதில், கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் இருந்த நிரவ் மோடி நீதிமன்றத்தில் ஆஜரானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது, இந்தியாவிடம் உங்களை ஒப்படைக்க சம்மதமா என்று நீதிபதி மல்லன் அவரிடம் கேட்கவே, அவர் தெளிவான குரலில், "நான் சம்மதிக்கவில்லை” என்று பதிலளித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தவிற அவர் நீதிமன்றத்தில் வேறு ஏதும் பேசவில்லை என்பது டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான வழக்கு தொடர்பாக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு லண்டன் நீதித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 2021 ஆம் ஆண்டு பதிவேற்றப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்துள்ளனர். அதில், வைரலாகும் பதிவில் இருப்பது போன்ற எந்த ஒரு தகவலும் இல்லை என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது.
இறுதியில், தேடலின் முடிவில், வங்கி மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி காங்கிரஸ் தலைவர்களுக்கு கமிஷன் கொடுத்ததாகவும், அவர்களே அவரை நாட்டை விட்டு வெளியேற கூறியதாகவும் லண்டன் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும், உண்மையில் அவர் அப்படி எந்தவொரு வாக்குமூலமும் அளிக்கவில்லை என்றும் ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளனர்.
இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
https://newsmeter.in/fact-check-tamil/nirav-modi-statement-on-money-to-congress-leaders-740992#google_vignette
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.