/indian-express-tamil/media/media_files/2025/01/24/duApIMzxNMxGEeJ8dVi5.jpg)
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனை சபாநாயகர் அப்பாவு 'என் தம்பி' எனக் குறிப்பிட்டு அழைத்ததாக சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 23 ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரிக்க 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அறிவித்தது. அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து, சைதாப்பேட்டை 9-வது கோர்ட்டில் ஞானசேகரனை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்ட நிலையில், ஞானசேகரனிடம் விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு எழும்பூர் காவல் நிலையத்தில் வைத்து ஞானசேகரனிடம் நடத்தப்பட்டு மறுநாள் அதிகாலையில் அண்ணா நகர் துணை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கைது செய்யப்பட்டிருக்கும் ஞானசேகரன், தி.மு.க உறுப்பினர் அல்ல. அவர் தி.மு.க அனுதாபி, ஆதரவாளர். அதனை மறுக்கவில்லை. அமைச்சர்களுடன் படம் எடுத்திருக்கலாம். அதிலும் தவறில்லை. அவர் யாராக இருந்திருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்” என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்நிலையில், " 'என் தம்பி ஞானசேகரன் வழக்கு' பாலியல் குற்றவாளியை சபாநாயகர் பேச்சா இது? இதுக்கு மேல ஒரு கேடுகெட்ட ஆட்சிய பார்க்க முடியாது” என்ற கேப்சனுடன் சபாநாயகர் அப்பாவு பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “தற்போது தான் மூன்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளை தம்பி ஞானசேகரின் வழக்கை விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது” என்று அப்பாவு கூறுகிறார்.
இந்த நிலையில், சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் சபாநாயகர் அப்பாவு பேசியுள்ள வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப்பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
உண்மைச் சரிபார்ப்பு
சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வரும் வீடியோவின் உண்மை தன்மையை கண்டறிய இதுதொடர்பாக சர்ச் செய்து பார்த்துள்ளனர். அப்போது, “இந்தியா வென்றது நூல் வெளியீட்டு விழாவில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு” என்ற தலைப்பில் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டுள்ள நேரலை வீடியோ காட்சி அதன் யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டிருந்தது.
அந்த வீடியோவில் 10:53 பகுதியில் பேசும் அப்பாவு, “எனக்கு ஒரு நண்பர் சால்வை அணிவித்தார். அவரது பெயர் என்னவென்று கேட்டேன். ஞானசேகரன் என்றதும் அப்படியே அதிர்ந்துவிட்டேன். அவர் (கைதான ஞானசேகரன்) எப்படி வந்துவிட்டார் எனப் பார்த்தேன். அதற்கு, “ஐயா நான் வேறு ஞானசேகரன்” என்றார். அப்படிப்பட்ட தம்பி ஞானசேகரன் அவர்களே” என்கிறார். இருவரும் வேறு வேறு நபர்கள் என்பதை அவரது பாணியில் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.
அப்பாவு தொடர்ந்து பேசுகையில், “தற்போது தான் மூன்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளை தம்பி ஞானசேகரின் வழக்கை விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது” என்று கூறிய அப்பாவு தனக்குச் சால்வை அணிவித்த ஞானசேகரனை கை காட்டி “எனது தம்பி” என்கிறார். தொடர்ச்சியாக, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் தொடர்பான வழக்கை மேற்கோள் காட்டுகிறார்.
அதே காணொலியின் 37:50 பகுதியில், பேரவைத் தலைவர் அடுத்தகட்ட பணிகளுக்காக விடைபெறுகிறார். ஆனால், அவர் இருக்கும் போதே பேசியதற்கு தம்ப்நெய்லும் போட்டுவிட்டனர். அவர் தம்பி என்று கீழே இருப்பவரை கை காட்டி விட்டு ஞானசேகரன் என்று அவரைக் கூறுகிறார்” என்று தெளிவாக விளக்குகிறார் பத்திரிக்கையாளர் இந்திரகுமார் தேரடி. தொடர்ந்து, “இது சர்ச்சையாகும் என்று தெரியும் அதனால் தான் இப்போதே விளக்குகிறோம்” என்றும் கூறுகிறார்.
இதுகுறித்து நெல்லையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைரலாகும் தகவல் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சபாநாயகர் அப்பாவு, “நான் சாதாரணமாக பேசியதை பெரிதுபடுத்தி வருகிறார்கள். நான் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ஞானசேகரன் என்ற நபர் எனக்கு சால்வை அணிவித்தார். அவரது பெயரை கேட்டு நகைச்சுவையாக அவரை மையப்படுத்தி பேசியதை சர்ச்சையாக்கி விட்டனர்” என்று பேசியதாக புதிய தலைமுறை ஊடகம் ஜனவரி 22 செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த விளக்கம் அளித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ‘இந்தியா வென்றது’ புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் பத்திரிக்கையாளர் நிரஜ்ஜன் குமார், நிகழ்ச்சிக்கு வந்திருந்த எல்.ஐ.சி ஏஜெண்டான ஞானசேகரனை கையிட்டு காட்டி சபாநாயகர் தம்பி என்று கூறினார் என குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அவர்கள் பேசியது தொடர்பாக சில வீடியோ காட்சிகள் வேகமாக பரவி வருவதால் விளக்கங்களை அளிக்க வேண்டி இருக்கிறது
— Niranjan kumar (@niranjan2428) January 21, 2025
முதலில் அப்பாவு அவர்கள் பேசியது நான் எழுதிய இந்தியா வென்றது புத்தகத்தின் வெளியிட்டு விழா.
அதனால் அதற்கான விளக்கத்தை நான் அளித்தால் சரியாக…
இறுதியாக, நியூஸ் மீட்டர் தேடலின் முடிவில் சபாநாயகர் அப்பாவு அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஞானசேகரனை ‘என் தம்பி’ என்று கூறியதாக வைரலாகும் வீடியோ தவறானது என்றும்,
உண்மையில் அவர் சபாநாயகர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஞானசேகரன் என்பவரையே குறிப்பிட்டு காட்டினார் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.
இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
https://newsmeter.in/fact-check-tamil/speaker-appavu-mentions-accused-gnanasekaran-as-his-brother-742571
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.