கல்லூரி சீருடையில் மீன் விற்று கேலி, கிண்டலுக்கு ஆளான கல்லூரி மாணவி ஹனனுக்கு ஆதரவாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குரல் கொடுத்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக சமூகவலைத்தளங்களில் பல்வேறு கேலி கிண்டலுக்கு ஆளாகிய கேரள பெண் ஹனனுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன. சமூகவலைத்தளுக்கு இருக்கும் சக்தி நினைத்து பார்க்க முடியாத ஒன்று. ஒரு நல்லதை கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் மாற்றக்கூடிய ஆபூர்வ ஆற்றல் இந்த சமூகவலைத்தளங்களுக்கு இருக்கிறது.
ஒரு பெண்ணுக்கு நல்லது நடக்கும் என்று பகிரப்பட்ட ஒரு வீடியோ, அவருக்கு இப்படி ஒரு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்று யாரும் நினைத்து இருக்க மாட்டார்கள். எர்ணாகுளம் அருகே தொடுபுழாவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஹனன். ஒரே நாளில் கேரள வாசிகளின் ஃபேஸ்புக் பக்கங்களில் வைரல் பெண்ணாக மாறினார்.
தொடுபுழாவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து ஹனன், காலையில் காலேஜ் செல்பார், மாலையில் மீன் விற்பார். அதிகாலையில் எழும் ஹனன் மீன் மார்க்கெட்டுக்குச் சென்று மீன் வாங்கி வந்து அதை மாலையில் விற்பார். பொறுப்பில்லாத தந்தை, உடல் நலம் சரியில்லாத அம்மா,தம்பி இவர்கள் தான் ஹனின் குடும்பத்தினர்.மீன் விற்பனையின் மூலம்தான் ஹனன் தனது படிப்பையும், தனது குடும்பத்தையும் கவனித்து வருகிறார்
.
ஒருநாள் கல்லூரி சீருடையில் ஹனன் தெருவில் மீன் விற்ற புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியானது. அதைத்தொடர்ந்து அவர் குறித்து சிறப்பு செய்தியும் மாத்ருபூமி நாளேட்டில் வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் மலையாள திரை நட்சத்திரங்களும் ஹனனின் நடவடிக்கையைப் புகழ்ந்து உதவி செய்ய முன்வருவதாகத் தெரிவித்தனர். அதே நேரத்தில் ஹனுக்கு எதிராக சமூகவலைத்தளங்கில் சில குழுக்களும் ஒன்றிணைந்தனர்.
பணத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் ஹனான் தெருவில் மீன் விற்பது போல் நடிக்கிறார் என தகவல் பரப்பினர்.இதற்கு கண்டனக்குரல்கள் எழுந்தன. சிலர் ஆதரிக்கவும் செய்தனர். ஆதரவாளர்கள் ஹனானை மேலும் மேலும் இழிவுப்படுத்தி செய்தி பரப்பினர்.ஹனனின் செயல்பாடுகள் மீது சந்தேகம் எழுப்பிய நெட்டிசன்கள் ஹனின் நடவடிக்கை போலியானது, செய்தியும் போலியானது என்று கூறி அவரைக் கடுமையாக விமர்சித்தனர். இது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பாக உருவெடுத்தது.
ஆனால், ஹனனின் கல்லூரி முதல்வர், தோழிகள், உறவினர்கள் அனைவரும் மாத்ரூபூமி நாளேட்டில் வந்த செய்தி உண்மையானதுதான். ஹனன் உண்மையில் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர், அவரின் பொருளாதார நிலையால் மாலை நேரத்தில் மீன் விற்கிறார். அந்தச் செய்தி போலியானது அல்ல என்று ஆதரவு தெரிவித்தனர். இருந்தாலும், நெட்டிசன்கள் தொடர்ந்து ஹனனைப் புண்படுத்தும் வகையில் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.
இதனால் மனம் உடைந்து ஹானன் தன்னை விமர்சிப்பவர்களிடம் தன்னை ட்ரோல் செய்ய வேண்டாம் என்று வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். இது குறித்து அறிந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் ஃபேஸ்புக்கில் ஹனனுக்கு ஆதரவு அளித்து கருத்துகளைப் பதிவிட்டிருந்தார்.
அவரைத்தொடர்ந்து, கேரள முதல்வர் பினராயி விஜயன், தன், 'பேஸ்புக்' பக்கத்தில் ஹனனுக்கு ஆதரவாக நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்ம”ஹனான் என்ற அந்தப் பெண்ணை பார்த்து, பெருமைப்படுகிறேன். தன் சொந்த உழைப்பில் சம்பாதித்து, அதில் கிடைக்கும் பணத்தில் படிப்பது மட்டும் இல்லாமல், தன் குடும்பத்தையும் காப்பாற்றும் இந்த பெண்ணின் செயல் போற்றுதலுக்குரியது.இதில் உள்ள மகிழ்ச்சி, அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். விமர்சனங்களைப் பார்த்து கலங்கிவிடாமல், தன்னம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் வெற்றி நடை போடும் அந்த மாணவிக்கு,எப்போதும் என் ஆதரவு உண்டு” என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.