இட்லிக்கு சட்னி, சாம்பார், தோசைக்கு சட்னி சாம்பார் என்று தானே சாப்பிட்டு பழக்கம் ஆனால் இப்போதெல்லாம் வித்தியாசமான காம்பினேஷனில் உணவு தயாரிப்பதுதான் டிரெண்ட் ஆக இருக்கிறது.
பெங்களூருவில் தெருவோர உணவகம் ஒன்றில் விற்பனை செய்யப்படும் ஒரு வித்தியாசமான காம்பினேஷன் உணவு வகைக்காக டுவிட்டரில் ஒரு யுத்தமே நடக்கிறது என்றால் பாருங்கள்.
பெங்களூருவில் தோசைக்கு தொட்டுக்கொள்ள ஐஸ்கிரீம் கொடுப்பது பலரின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. அதிலும் தோசையுடன் சாக்லேட், வெனிலா, ஸ்ட்ராபெரி என்று ஐஸ்கிரீம் காம்பினேஷன் எனும்போது சட்னி காய்கறி சாம்பார் என்று பழக்கப்பட்ட மக்களுக்கு இது வித்தியாசமாக இருக்கிறது. பலர் இது நன்றாக இருக்கிறது என்றும் சிலர் இது என்ன வினோத முயற்சி என்றும் விவாதித்து வருகிறார்கள்.
இந்த ஐஸ் கிரீம் தோசையைப் பற்றி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில், குறிப்பிட்டு இந்த ஐஸ் கிரீம் தோசையை கண்டுபிடித்த நபரை புதிய கண்டுபிடிப்பாளர் என்று பாராட்டம் இந்த ஐஸ் கிரீம் தோசை உலகம் முழுவதற்கும் தெரிய ஆரம்பித்தது.
இந்த ஐஸ் கிரீம் தோசையைக் கண்டுபிடித்த நபர் யார் என்று ஊடகங்கள் தேடியபோது அந்த நபர் மஞ்சுநாத் என்பது தெரியவந்தது. அவர் தென்னிந்திய உணவான தோசைக்கு ஒரு இனிப்பு ஃப்ளேவர் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து சூடான தோசைக்கு கூலான ஐஸ்கிரீம் கொடுத்துள்ளார்.
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ஐஸ்கிரீம் தோசையைப் பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில், “ஐஸ் கிரீம் தோசை பிரியனாக அல்லாமல், அந்த ஜெண்டில்மேனின் புதுமையான முயற்சிக்கு மொத்த மதிப்பெண்கள் போடலாம். உண்மையில் இந்திய தெருவோர வியாபாரிகள் ஒரு தீர்ந்துபோகாத புதுமை முயற்சிகளை வைத்துள்ளது. எங்களுடைய எல்லா உற்பத்தி வடிவமைபு குழுவும் வழக்கமாக அவர்களிடம் இருந்து உத்வேகம் பெற வியாபாரிகளைப் பார்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டு புகழ்ந்துள்ளார்.
இதற்கு சிலர் இந்த ஐஸ் கிரீம் தோசை புதுமையை ஒப்புக்கொண்டனர். சிலர் அவர்கள் அதை க்ரெப்ஸ் மற்றும் வாஃபிள்ஸுடன் ஒப்பிடும்போது நிச்சயம் முயற்சி செய்வது மதிப்புக்குரியது என்றும், மற்றவர்கள் அவ்வளவு சிலிர்ப்பாக இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், பலர் இது என்ன ஐஸ் கிரீம் தோசை என்று அதிருப்தி தெரிவித்ததோடு, பாரம்பரிய உணவுகளின் தூய்மையை பராமரிக்க வேண்டும், அது போன்ற உணவுகளை அழிக்கக்கூடாது என்று கூறியுள்ளனர்.
நெட்டிசன்கள் பலர் இந்த தெருவோர உணவக உரிமையாளர்களின் தொழில் முனைவோர் மற்றும் புதுமைகளில் உள்ள நிபுணத்துவத்தை பெருமையாகப் பேசினாலும் பலர் இப்படி தோசைக்கு ஐஸ் கிரீம் என்ற வழக்கத்திற்கு மாறான காம்பினேஷன் கொடுப்பது பற்றி தங்களின் அச்சத்தை தெரிவித்துள்ளனர்.