/indian-express-tamil/media/media_files/2025/09/19/food-poisoned-techie-2025-09-19-15-37-26.jpg)
தனது பதிவில் நிஜாமுதீன், தனது “சக ஊழியர்கள், முதலாளி, வாடிக்கையாளர், துப்பறியும் நபர் மற்றும் அவர்களின் சமூகம்” ஆகியோரை முக்கியமாக குற்றம் சாட்டினார். Photograph: (Image source: Express Photo)
இந்திய தொழில்நுட்ப வல்லுநர் முகமது நிஜாமுதீன், கலிபோர்னியாவில் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு, தனது லிங்க்டுஇன் பதிவில், தான் உணவில் விஷம் வைத்து கொல்லப்படலாம் என சந்தேகிப்பதாகவும், இனவெறி துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகமான லிங்க்டுஇன்-ல், நிஜாமுதீன் தன்னை ஒரு “இனவெறி வெறுப்புக்கு ஆளானவர்” என விவரித்துள்ளார். மேலும், “வெள்ளையர் மேலாதிக்கம்/ இனவெறி வெள்ளைய அமெரிக்க மனப்பான்மை” என்று அவர் குறிப்பிட்டதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
தெலங்கானா மாநிலம், மகபூப்நகரைச் சேர்ந்த 30 வயதான மென்பொருள் பொறியாளர் முகமது நிஜாமுதீன், இந்த மாதம் தொடக்கத்தில் கலிபோர்னியாவில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு, அவர் தனது பணிபுரியும் இடத்திலும், வசிக்கும் இடத்திலும் கடுமையான துன்புறுத்தல் மற்றும் இனவெறி பாகுபாடுகள் உள்ளதாக வெளிப்படையாக குற்றம் சாட்டினார். மேலும், தனது உணவில் விஷம் கலக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
தனது லிங்க்ட்இன் பதிவில், நிஜாமுதீன் தன்னை “இனவெறி வெறுப்பு, இனவெறி பாகுபாடு, இனவெறி துன்புறுத்தல், சித்திரவதை, ஊதிய மோசடி, சட்டவிரோதமாக பணி நீக்கம் மற்றும் நீதிக்கு தடை என பலவற்றிற்கு ஆளானவர்” என்று குறிப்பிட்டுள்ளார். “போதும், இது போதும். பெருநிறுவனங்களின் கொடுங்கோன்மை முடிவுக்கு வர வேண்டும்” என்றும் அவர் எழுதியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மென்பொருள் சேவைகள் நிறுவனமான இ.பி.ஏ.எம் (EPAM) சிஸ்டம்ஸ் மூலம் கூகுளில் தான் பணிபுரிந்ததாக நிஜாமுதீன் கூறியுள்ளார். மேலும், இரு நிறுவனத்தையும் மற்றும் தனது சக ஊழியர்களையும் விரோதப் போக்கு மற்றும் குறைவான ஊதியம் வழங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். “கூடுதலாக, நிறுவனம் ஒரு ஊதிய மோசடியை செய்தது... அவர்கள் எனது வேலையை மொத்தமாக தவறாக முடித்துவிட்டார்கள்” என்றும் அவர் குற்றம் சாட்டினார். வேலையை இழந்த பின்னரும், “இனவெறி துப்பறியும் நபர் மற்றும் குழு” மூலம் மிரட்டல் தொடர்ந்ததாகவும், அது பின்னர் அவர் வெளியேற்றப்படும் வரை அதிகரித்ததாகவும் அவர் கூறினார்.
இ.பி.ஏ.எம் சிஸ்டம்ஸ், ஒரு அமெரிக்க மென்பொருள் பொறியியல் சேவை நிறுவனமாகும் மற்றும் ஒரு கூகிள் கிளவுட் பங்குதாரராகும். இந்நிறுவனம் இதுவரை இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை என்று அதன் இணையதளத்தில் உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது பதிவில், நிஜாமுதீன் தனது “சக ஊழியர்கள், முதலாளி, வாடிக்கையாளர், துப்பறியும் நபர் மற்றும் அவர்களின் சமூகம்” ஆகியோரை முக்கியமாக குற்றம் சாட்டியுள்ளார். “இது இன்று எனக்கு நடக்கிறது, நாளை வேறு யாருக்கும் இது நடக்கலாம்” என்றும் அவர் எச்சரித்தார். உலகமே இதற்கு நீதி கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிஜாமுதீன் புளோரிடாவில் உள்ள ஒரு கல்லூரியில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், தொழில்நுட்பத் துறையில் பணிபுரிய கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவுக்கு சென்றார். அவரது குடும்பத்தினர் அவரை அமைதியான, மதப்பற்று கொண்ட நபர் என விவரித்தனர். அவர் அடிக்கடி பாகுபாடு, ஊதிய மோசடி மற்றும் சட்டவிரோத பணி நீக்கம் குறித்து தனது கவலைகளை தெரிவித்ததாகவும் கூறினர்.
அவரது தந்தை, முகமது ஹஸ்னுதீன், தனது மகன் இறந்த செய்தி வியாழக்கிழமை அன்றுதான் தனக்கு தெரியவந்தது என்றார். அவரது மகனின் மரணம் செப்டம்பர் 3-ம் தேதி ஒரு “சண்டைக்கு” பிறகு நடந்ததாக கூறப்படுகிறது. தனது மகனின் உடலை இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வர உதவுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
https://infogram.com/all-india-suicide-helplines-1hxj48ppyn0j52v
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.