விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் நோயாளியை வெளியே நிற்கவைத்து சிகிச்சை அளித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களுடைய அர்ப்பணிப்பு மிக்க சேவைக்கு பொதுமக்களும் அரசும் பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில், சில தனியார் மருத்துவர்கள் இந்த கொரோனா பேரிடர் காலத்தில் பயந்துகொண்டு தங்கள் கிளினிக்குகளை பூட்டிவிட்டு வீடுகளிலேயே அடைந்து கிடக்கின்றனர். சில தனியார் மருத்துவமனைகள், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை வாயிலிலேயே நிறுத்தி உடல் வெப்பநிலை பரிசோதனை, சளி, இருமல் இருக்கிறதா என்று கேட்டு விசாரித்து அவர்களுக்கு அறிகுறி எதுவும் இல்லை என்று அறிந்த பிறகே மருத்துவமனைக்குள் அனுமதிப்பதும் நடந்தது.
கொரோனா பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிகிச்சை பெற சென்ற ஒரு இளைஞரை, மருத்துவர் வாயிலில் வெளியேயே நிற்க வைத்து, உடம்புக்கு என்ன என்று விசாரித்துவிட்டு அருகில் இருக்கும் பெண் உதவியாளரிடம் மாத்திரை சீட்டு கொடுத்து அனுப்பி அந்த இளைஞரை வாங்கிக்கொள்ள சொல்லி அனுப்புகிறார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
@CMOTamilNadu @Vijayabaskarofl Social Distancing at its best , being followed in கண்டமங்கலம். pic.twitter.com/Khj3Cn3qBj
— Janarthanan (@vjanar) June 10, 2020
இந்த வீடியோவில், கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாயிலில் சேர், டேபில் போட்டு அமர்ந்துள்ளார் மருத்துவர். வாயிலுக்கு வெளியே தொலைவில் ஒரு நோயாளி இளைஞர் மருத்துவ சிகிச்சைக்காக நிற்கிறார். மருத்துவர் அருகில் இருக்கும் பெண் உதவியாளர் அந்த இளைஞரிடம் தொண்டை வலிக்கிறதா என்று கேட்கிறார். அப்போது அங்கே எதிரே செல்போனில் வீடியோ எடுப்பவரிடம் தம்பி ஏன் போட்டோ எடுக்கிறீர்கள் என்று கேட்கிறார். பின்னர், அவரே சரி எடுங்க என்று கூறிவிட்டு, அந்த நோயாளிடம் மருத்து சீட்டு கொடுத்துவிட்டு, வீடியோ எடுப்பவரிடம் இந்த அறிவிப்பு பலகையை படித்துவிட்டு எடுங்கள் என்று கூறுகிறார். இடையே வீடியோ எடுப்பவர் இதுதான் டாக்டர் செக் அப் என்று கூறுகிறார்.
பின்னர், அந்த நோயாளியிடம் தம்பி அங்கே மாத்திரை வாங்கிக்கொள்ளுங்கள் என்று அந்த பெண் கூறுகிறார். இதையடுத்து, மருத்துவர் ஏன் வீடியோ எடுக்கிறீர்கள் என்று கேட்க வீடியோ எடுக்கும் நபர் கவர்ன்மெண்ட் சர்வீஸ்தானே செய்யறீங்க? தப்பாகவா எடுக்கிறேன் என்று கூறுகிறார். அதற்கு மருத்துவர் என்னுடைய முகத்தைப் பார்த்து நேராக எடுக்கலாம் இல்லையா என்கிறார். அதற்கு வீடியோ எடுப்பவர் நீங்கள் மாஸ்க் போட்டிருக்கிறீர்கள். உங்கள் முகம் தெரியாது என்று கூறுகிறார்.
கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர் நோயாளியை வெளியே தொலைவிலேயே நிற்க வைத்து என்ன என்று கேட்டு சிகிச்சை அளிக்கும் இந்த வீடியோ விமர்சனத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.